March 11, 2016

Machamuni - Part 2

மச்சமுனி ஐயா

சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் அம்பாளின் தரிசனத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே"


- அகத்தியர் 12000 -

ஆடி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தார் மச்ச முனி. குருவருளால் எண் வகை மகாசித்திகளையும் பெற்றார். உலக ஆசை அற்றவரான இவர் தன் சொத்தையெல்லாம் விற்று ஏழை பரதேசிகளுக்கு அன்னதானம் செய்தார் என்று அகத்தியர் நூல் கூறுகின்றது. 

இவர் காக புசுண்டரின் சீடராவார். மச்சமுனி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமா தேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது? அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க முடியும்? என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்குல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன. எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன். 


கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி. 

பதினென் சித்தர்களின் ஒருவரான மச்சேந்திர நாதர் ஒருசமயம் வடக்கு பொய்கை நல்லுரில் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கும்போது அவ்வீட்டு பெண் அவருக்கு பிச்சை இட்டு தனக்கு குழந்தை இல்லாத குறையை கூறி தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று மச்சேந்திர நாதரிடம் வேண்டினாள்.

மச்சேந்திரர் உடனே அவர் வைத்திருந்த குருமருந்தை விபூதியாக அந்த பெண்னிடம் கொடுத்து அதை சாப்பிட்டால் உனக்கு பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று சொல்லி சென்றுவிட்டார். இந்த விஷயத்தை அந்த பெண் தன் பக்கத்து வீட்டு பெண்னிடம் சொல்ல அவளோ சாமியார்கள் கொடுத்த விபுதியை சாப்பிடாதே அதில் உணக்கு வசியம் வைத்திருக்கலாம் அது உன்னை மயக்கிவிடும் அபாயம் உண்டு என்று எச்சரித்து சென்றுவிட்டாள் இவளோ பயந்து அந்த விபூதியை எறியும் அடுப்பில் கொட்டி விட்டாள்.

கோரக்கர்பண்ணிரெண்டு ஆண்டுகள் கழித்து மச்சேந்திர சித்தர் மீண்டும் அவ்வூருக்கு திரும்பி அதே வீட்டில் பிச்சை கேட்டு நிற்கிறார். பிச்சையிட வெளிவந்த பெண்ணை பார்த்து என்னை அடையாளம் தெரிகிறதா எங்கே உன் பிள்ளை நான் பார்க்க வேணடும் என்று கூற, அந்த பெண் சித்தரின் காலில் விழுந்து என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கள் அளித்த விபூதியை சாப்பிடாமல் அதை அடுப்பில் எரிந்துவிட்டேன் என்று நடந்ததை கூறி, எனக்கு இன்று வரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று அழுது நின்றாள்.

மச்சேந்திரர். அப்பெண்னிடம் அடுப்பில் எரிந்த விபூதியின் சாம்பலை எங்கே போட்டாய் என்று கேட்டார் அவள் கோரைபுற்கள் நிறைந்த ஒரு குப்பைமேட்டை காண்பித்தாள் உடனே மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கி கோர்க்கா என்று கூவி அழைத்தார், உடனே அக்குப்பை மேட்டிலிருந்து 12 வயது பாலகனாக ஒரு குழந்தை வெளிவந்தது. அக்குழந்தையை கட்டி அனைத்து ஆசிர்வதித்து அப்பெண்னிடம் கொடுத்தார். இதுவே கோரக்கரின் அவதார வரலாறு என்று சொல்கின்றனர்.

மச்சமுனி சித்தர் கோரக்கருடன் சேர்ந்து மலைகளில் தவத்தினை மேற்கொண்டார் கோரக்கருக்கும் பல உபதேசங்களை உபதேசித்து ஞானத்தைத் தெளிவு படுத்திய பின்னர் நாட்டை அடைந்தனர்.

அங்கு தன் மனைவி மக்களை பார்த்த பின்னர் மீன்டும் சுகபோகங்களில் தழைத்து வாழ்ந்தார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு கோரக்கர் தன் குரு இப்படி தனது தவ நிலையை மறந்து லௌகீக வாழ்க்கைக்கு அடிமையாக உள்ளாரே என வருந்தி அவரிடம் அவரின் சக்தியையும் எடுத்துக்கூறி மீண்டும் தவ வாழ்க்கைக்கு கூட்டி செல்கிறார்.

ஆனால் மச்சமுனி சித்தர் காட்டு வழியாக செல்லும் பொழுது கோரக்கரிடம் இங்கு கள்வர் தொல்லை இருக்குமா என்று பயத்தில் தொண தொணத்து கொண்டே வருகிறார்.

கோரக்கருக்கோ ஏன் நம் குரு இவ்வளவு பதற்றத்துடன் இருக்கின்றார் என்று சந்தேகம்.

குரு மச்சமுனி சீடர் கோரக்கரிடம் காவல் புரிய சொல்லிவிட்டு கண்ணயர்ந்தார்.

கோரக்கர் குருவின் பையை பார்த்தார் அதில் தங்கக்கட்டியை வைத்திருந்தார் மச்சமுனி.

கோரக்கருக்கு குருவின் பயத்திற்கான காரணம் புரிந்தது.

தங்ககட்டியை கல்லாக மாற்றிவிட்டார் கோரக்கர்.

கண்விழித்து எழுந்த மச்சமுனி தங்கக்கட்டி கல்லாக இருப்பதையும் அதற்கு காரணம் தன் சீடன் கோரக்கன் தான் என்பதும் தெரிய வர கோபமுற்ற மச்சமுனி கோரக்கா ஏன் இவ்வாறு செய்தாய் உன்னை என்ன செய்கிறேன் பார் எனக் கோபமுடன் சாபமிட முற்பட கோரக்கர் மச்சமுனி தாள் பணிந்து எழுந்தார்.

குருவே ஏன் இந்த கோபம் உங்களுக்கு வேண்டிய பொன்னை இப்பொழுதே தருகிறேன் என்று கூறி அருகில் இருந்த கல்மலையின் மீது கமண்டல நீரைத் தெளித்து சிவ நாமத்தை சொன்னார் உடனே கல்மலை பொன் மலையாக மாறியது.

குருவே உங்களுக்கு வேண்டியது பொன்தானே இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் கோரக்கர்.

மச்சமுனி கண்கள் குளமாகின வீழ்ந்தார் கோரக்கரின் தாள்.

அப்பா கோரக்கா தவறிழைத்து விட்டேன் ஒன்றுக்கும் உதவாத செல்வத்தின் மீது ஆசை வைத்து உண்மையான மெய்ப் பொருளை மறந்தேன் என்னை உன் சீடனாக ஏற்று நல்வழிப் படுத்து என்றார் மச்சமுனி.

அதற்கு கோரக்கர் குருவே தாங்கள் பிறக்கும் பொழுதே ஈசனை தரிசித்தவர் ஈசனால் உபதேசம் பெற்றவர் அவ்வறான உங்களுக்கு நான் குருவாக இருக்க முடியுமா என்றென்றும் தாங்களே எனக்கு குருவாய் இருந்து நல்வழிபடுத்துங்கள் என்றார்.

கோரக்கருடன் காட்டிலேயே இருந்து தவவலிமையால் சித்தயோகம் பெற்று கோரக்கருக்கும் உபதேசித்து பழைய சித்துக்களையும் பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார் இறையுடன் இறையாக.

மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம் 800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறைக்கு “கபால தீட்சை” என்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்.
சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு
நின்றிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்
சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு
கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"
- மச்சமுனி -

மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று
வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு
சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும்
பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே"
- மச்சமுனி -

சாதகரின் உச்சியில் "றீம்" என்ற மந்திரத்தினையும்,புருவ மத்தியில் "ஓம்" என்ற மந்திரத்தினையும்,கண்டத்தில் அதாவது தொண்டையில் "அங்" என்ற மந்திரத்தினையும், மார்பில் "மங்" என்ற மந்திரத்தையும்,நாபியில் "சிங் வங்" என்ற மந்திரத்தையும் உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர். இதுவே கபால தீட்சை ஆகும். இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?, அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

பொருந்திய தீட்சையைப் புனிதம தாக
வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு
திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம்
இருந்திடு மந்த ஏகாந்த மாகவே"
- மச்சமுனி -

ஆகமா யந்த அருள்சிவ சக்தியை
பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே
ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை
தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே"
- மச்சமுனி -

மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால் உணர்ந்து தினமும் தியானித்து வந்தால் தியானிப்பவர் உடலானது கைலாசம் போல் ஏகாந்தமாய் நிற்குமாம். இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன் சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம். மேலும் தினமும் இந்த கபால தீட்சையை மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில், தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன் உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

மச்சமுனி...

மச்சமுனி சூத்திரம் 21
மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30
மச்சமுனி பெரு நூல் காவியம் 800
மச்சமுனி வைத்தியம் 800
மச்சமுனி கடைக் காண்டம் 800
மச்சமுனி சரக்கு வைப்பு 800
மச்சமுனி திராவகம் 800
மச்சமுனி ஞான தீட்சை 50
மச்சமுனி தண்டகம் 100
மச்சமுனி தீட்சா விதி 100
மச்சமுனி முப்பு தீட்சை 80
மச்சமுனி குறு நூல் 800
மச்சமுனி ஞானம் 800
மச்சமுனி வேதாந்தம் 800
மச்சமுனி திருமந்திரம் 800
மச்சமுனி யோகம் 800
மச்சமுனி வகாரம் 800
மச்சமுனி நிகண்டு 400
மச்சமுனி கலை ஞானம் 800
ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும்,


இத்துடன் இவர் மாயாஜாலங்களைப் பற்றி எழுதிய மாயாஜால காண்டம் என்னும் நூலும் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன, திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.


Home
Pathinettu Siththargal Previous                                                    Next

No comments:

Post a Comment