April 27, 2014

Aiyadigal Kadavarkon Nayanar - Nayanmar 45

45. Aiyadigal Kadavarkon Nayanar

Sri Swami Sivananda
Aiyadigal Kadavarkon Nayanar was a Pallava king who ruled over Kanchi. He infused the spirit of Saivism into his people, too.

Soon he got disgusted with worldly life, renounced the world, after installing his son in his place, and undertook a continuous pilgrimage of the various shrines singing hymns in His praise, wherever he went. Lord Siva was highly pleased with his devotion and blessed him with His Darshan.

This king has set an example for all kings and social leaders to follow. Leaders should be the best example for their followers. They should encourage the masses to walk the path of virtue and Godlines. Otherwise, they live in vain: and, what is more, they take upon their shoulders a good part of the sins of their followers, for they are responsible for those sins.

This Nayanar lives in our hearts even today because he served his subjects both by precept and by his own personal example. He taught them; he encouraged them; and, finally, by his own life of renunciation and wholehearted devotion of the Lord, set a glorious example for them to emulate. Such is the life of an ideal leader.

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - Sources: Dinamalar
 Temple images
உலகம் புகழ அரசோச்சிய பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர்தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் சைவ சமயத்தை வளர்த்து ஆட்சிபுரிந்து வந்தார். இவ்வேந்தர் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினாற்போல் பக்தியிலும், இறை வழிபாட்டிலும் மேம்பட்டு விளங்கினார். அரனாரின் திருவடித் தொண்டினைப் பேணி அரசாண்டார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். நல்ல தமிழ்ப் புலமை மிக்க இப்பூபாலன் வெண்பா பாடும் திறம் பெற்றிருந்தார். வண்ணத் தமிழ் வெண்பாவால் வேணி பிரானை வழிபட்டார். ஐயடிகள் காடவர்கோன் வடமொழியையும், தென்மொழியையும், இயல், இசை, நாடகத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் தோறும் சென்று திருசடை அண்ணலை வழிபட எண்ணினார். சிவ வழிபாட்டில் சித்தத்தைப் பதிய வைத்த மன்னர்க்கு அரசாட்சி ஒரு பெரும் பாரமாகத் தெரிந்தது. ஆட்சிப் பொறுப்பைத் தமது குமாரன் சிவ விஷ்ணு விடம் ஒப்புவித்தார். குமாரனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மாமன்னன் ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவயாத்திரையைத் தொடர்ந்தார். பற்பல தலங்களுக்குச் சென்று, எம்பெருமானை உள்ளங் குழைந்து உருகி துதித்து, ஆங்காங்கே தம் புலமையால் வெண்பா பல புனைந்தருளிய காடவர்கோன் நாயனார், கண்ணுதலார் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.

குருபூஜை: ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்.




ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராண சூசனம் பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. தேவாரவாய்மை திருத்தொண்டர் புராண உண்மையிற் பிரதிபலித்தல

திருத்தொண்டர் புராண உண்மைகள் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியில் அடக்கம். இத்திருவந்தாதியுண்மைகள் திருத்தொண்டத் தொகையிலடக்கம். திருத்தொண்டத் தொகை உண்மைப் பொறுதி சுந்தரமூர்த்தி நாயனாரில் அடக்கமாம். அது, சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய தொகைக்கு விரிவாக நம்பியாண்டார்நம்பி இயற்றியருளிய திருவந்தாதிக்கு விருத்தியாகச் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணம் இயற்றியருளினார் என்றுள்ள வரலாற்றுண்மையாற் பெறப்படும். இச்சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தினை நகர்த்திருப்பதிகத்திற் பின்வரும் வாய்மை யொன்றைப் புலப்படுத்தியுள்ளார். பெறுதற்கரிதாகிய மானுட சரீரமானது முடிமன்னராய் உலகாண்டு அறபரிபாலனஞ் செய்யும் உயர்பெரு மகிமை தாங்குதற்கு முரியதாகும். ஆனால், இச்சரீரத்தோடு உயிர்க்குள்ள தொடர்பானது நாளொரு விதமாய்த் தேய்ந்து தேய்ந்து போய் ஒரு கட்டத்தில் உயிர் உடலை விட்டு அறுதியாக விலகியேவிட வேண்டிய அவலநிலையும் மேல் மேல் எடுக்க விருக்குஞ் சரீரந்தோறும் மீளமீள அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கும் அநர்த்தமும், தவிர்க்கமுடியாத வகையில் உளதாகும், அங்ஙனம் நிலையில்லாமையாகிய இப்பொய்ம்மையோடு கூடிய இந்த உடலுயிர் வாழ்க்கைப் பற்றை, மனமே, நீ அறவிட்டொழிவாயாக. விட்டதும் பாம்பை வைத்தாட்டுந் திருக்கரத்தினரும் பரமபதியும் திருமுருகன் தந்தையுமாயுள்ளவரும் திருத்தினை நகரில் எழுந்தருளி யுள்ளவருமாகிய சிவக்கொழுந்தீசனைச் சென்றடைவாயாக என்பது அவ்வாய்மை. அது நாயனார் வாக்கில், "வேந்த ராயுல காண்டறம் புரிந்து வீற்றிருக்குமிவ் வுடலது தன்னைத் தேய்ந்திறந்துவெந் தூயருழந்திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தளங்கையில் ஆட்டுகந்தானைப் பரமனைக் கடற் சூர்தடிந்திட்ட சேந்தன் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே" என வரும். திருத் தொண்டராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாற்றுண்மை இத்தேவார வாய்மைக்கு உருவந் தீட்டியவாறாக அமைந்திருக்கும் நயங்குறிப்பிடத்தகும்.

பிரசித்தமான பல்லவ அரசமரபில் தோன்றி நாடெங்குந் தருமநெறி தழைத்து எவ்வுயிரும் பெருமையுடன் வாழ்தற்காம் பாங்கில் சைவநெறி தழுவி யரசாண்டு பேர்புகழ் மிக்குத் திகழ்ந்தவர் இந்த நாயனார். இருந்தும் மேற்கண்டவாறான உடலுயிர் வாழ்வின் விளைவாம் அல்லலைத் தீர்த்தற்கு அது எவ்வகையினும் பரிகாரமாக மாட்டாமையினால் அதற்கு ஏற்ற பரிகாரமாகத் தக்கதென அறியப்பட்டுள்ள சிவதொண்டு புரிந்து கொண்டு வாழும் சிவனடியார் வாழ்க்கையே சிறந்ததெனத் துணிந்து அவ்வாழ்க்கை மேற்பற்று மீதூரப் பெற்றவ ராயினார். அதனால், அரச பாரத்தைத் தன் மகன்மேல், இறக்கிவிட்டுச் சிவனடியாராகித் தலயாத்திரை செய்து ஆங்காங்கு இயலுமளவு, திருத்தொண்டாற்றுவதும் தமது தெய்வஞானப் புலமையால் உடலுயிர் வாழ்விழிவும் உடையானாகிய சிவனைச் சார்ந்தொழுக வேண்டியதன் இன்றியமையாமையும் புலப்படச் செய்யுளிசைப்பதுமாக வாழ்ந்து சிவபதப்பே றெய்துவாராயினர். அது அவர் புராணத்தில், "மன்னவரும் பணிசெய்ய வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப்பார் அரசாட்சி இன்னவென இகழ்ந்ததனை எழிற்குமரன் மேலிழிச்சி நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்" - "தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின் கண் அண்டர் பிரானமர்ந் தருளு மாலயங்க ளானவெலாங் கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே வண்டமிழின் மொழிவெண்பா ஓரொன்றா வழுத்துவார்" - "இந்நெறியா லரனடியார் இன்பமுற இசைந்தபணி பன்னெடுநா ளாற்றிய பின் பரமர்திருவடி நிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரையடிகளார்" என வரும்.

2. சைவஞானநூல்களில் க்ஷேத்திரத் திருவெண்பாவின் நிலை

ஐயடிகள் நாயனார் தமது தலயாத்திரையின்போது தலத்திற் கொன்றாகப் பாடியருளிய திருவெண்பாக்களின் தொகுதி க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் வழங்கும். மெய்யுணர்வு, தலைப்பட்டுச் சிவனைச் சாரும் ஆன்மாவானது அதற்கு முன்னோடி நியமமாம்படி, உண்மை நிலையில் தனக்கு வேறாயிருந்தும் தன்னோடொன்றியிருக்கும் ஒன்றெனத் தோன்றி மயக்கும் தேகாதிப்பிரபஞ்சத்தின் நிலையில்லாமையும் அதன் பொல்லாப்பும் உணர்ந்து அதிலிருந்து விடுபடுதல் கடனாகும். அது, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சத்தி எனும் உணர்வநுபவ நிலைகளாகச் சைவசித்தாந்தத்தில் வைத்துணர்த்தப்படுவதும் துகளறு போதம் என்ற ஞான நூலிற் பூதப்பழிப்பு, அந்தக்கரண சுத்தி முதலாக அவை விரித்து வர்ணிக்கப்படுதலும் பிரசித்தமாம். அப்பர் சுவாமிகள் தேவாரத்தில், "செத்தையேன் சிதம்ப நாயேன் செடிதலை யழுக்குப் பாயும் பொத்தையே பேணி நாளும் புகலிடம் அறியமாட்டேன்" என்பதாதி யாகவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், "ஊன்மிசை உதிரக்குப்பை ஒருபொருளிலாத மாயம் மான்மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கு மிந்த மானிடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்" என்பதாதியாகவும் திருவாசகத்தில், "பொத்தையூண்சுவர்ப் புழுப்பொழிந்துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை" என்பதாதியாகவும் வருவன அப்பூதப் பழிப்புச் சார்பான தேகப் பழிப்புண்மை உணர்த்தும் அருளிச் செயல்களாகும். சிவனையடைதலாகிய முத்திப் பேற்றுக்கு மிகவும் இன்றியமை யாததாகிய இந்நெறியையே தமது செய்யுளாக்க நெறியாகக் கொண்டருளிய ஐயடிகள் நாயனார் உடலுயிர் வாழ்வில் நேரும் அவலக் கவலைகளைப் பகிரங்கமாக உணர்த்தும் மூப்புநிலை யிழிவு மரணாவஸ்தைக் கெடுபிடி நிலைமைகளைத் தமது ஞானப் புலமை நலஞ் சொட்டச் சொட்டப் பொருத்தமான சொற்புணர்ப்பும் ஓசைநயமும் பொருளுறுதியும் நகைச்சுவை இழிவரற்சுவை பெருமிதச் சுவை நலங்களுங் கனியும் நேரிசை வெண்பாக்களாற் பாடியருளினார். அநேகமான வெண்பாக்களின் முன்பகுதி குறித்த இப்பொருளமைவினதாகப் பின்பகுதி, அத்தகைய அவலம் நிகழுந் தருணம் வருவதற்கு முன்னாகவே, நெஞ்சே, இன்ன தலத்துச் சிவபெருமானை நினை, அழை, தொழு, சென்றடை என்ற பொருளமைவினதாகப் பொருந்த வைக்குங் கவிதை யுக்தி தழுவப்பட்டிருத்தல் காணலாம். இப்பாடல்களில், திருநாவுக்கரசு நாயனார் அருளிய பலவகைத் திருத்தாண்டகத்தில் வரும், "பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே" - "நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவாப்புலால் தானம் நீக்கலாமே எனவரும் எதுகைச் சொற்சித்திரங்கள் போன்ற சுவைதரும் எதுகைச் சொற்சித்திரங்கள் விரவிவருதல் இரசனையூட்டும் விசேட அம்சமாகும். அது, நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நெஞ்சமே தில்லைச்சிற்றம்பலமே சேர்" - "ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை" - "பாளை, அவிழ்கமுகம் பூஞ்சோலை யாரூரர்க் காளாய்க் கவிழ்கமுகங் கூம்புகவென்கை" - "கஞ்சி யருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சமே திருத்துருத்தியான் பாதஞ்சேர்" - "தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் கட்டி எடுங்களத்தா என்னாமு னேழை மடநெஞ்சே நெடுங்களத்தான் பாதநினை" என்பனவாதியாக வருதல் காண்க. (நல்லச்சிற்றம்பலம் - மயானம் - ஐயாறு வாயாறு பாயாமுன் - சிலேற்பனச் சளிப்பெருக்கு வாய்வழியே பாயாமுன் - கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா - கஞ்சி அருத்த (பருக்க) ஒருத்தி கொண்டுவா.) வகை துறையறியாது பிறப்புக்குப் பிறப்பு மாறிமாறி, மூப்பு மரண அல்லல்களுக் குள்ளாகும் உடலுயிர் வாழ்வே கதிமோட்ச மென்றிருந்து மாயும் நம்மனோர் பொருட்டிரங்கி இந்த நாயனார் மாபெரும் ஞானோபதேசமாக நின்று நிலவும் வண்ணம் இப்பாடற் றொதியை அருளிச்செய்தமையும் உயர்ந்த சிவதொண்டாகவே போற்றப்படும். இவர் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றதற்கு அது விசேடகாரணமாகக் கொள்ளலுந் தகும். மேலும், இந்த நாயனார் அரசபோக வாழ்வைக் கை நெகிழ்ந்து சிவனடியார் ஆதலுக்குபகரித்த அவரது உள்ளநிலை ஒரு வெண்பாவிற் பதிவிருத்தலும் இத்தொகுதிக்கு மற்றோர் சிறப்பாகும். அது, "படிமுழுதும் வெண் குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மை தொடியிலங்கு தோடேந்து கொன்றை யந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி உண்பதுறும்" என வரும். முடியாட்சி ஐஸ்வரிய அநுபவத்திலும் பார்க்க ஓடேந்திய பிச்சை பெற்றுண்டு சிவதொண்டராய் வாழ்தல் மும்மடங்கு விசேடம் பெறும் என்ற இவர் விவேகமே விவேகமாம் என்க.
திருச்சிற்றம்பலம்.
 
Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment