December 09, 2014

Periya Alwar - Part 2

வில்லிபுத்தூர்
பாண்டிய நாடு முத்தும் முத்தமிழும் பெற்றதனால் பொலிவுற்று விளங்கும் நாடாக உளது. அப்பாண்டிய நாட்டில் புத்தூர் என்னும் ஊரை அடுத்த காட்டில் வாழ்ந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் பிறந்து, வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தார்கள்.

ஒரு நாள் வில்லியும் கண்டனும் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றனர். கண்டன் புலியைப் பின்தொடர்ந்து சென்று அம்புகள் ஏவியபொழுது, அம்பிற்குத் தப்பிய புலி கண்டனைக் கொல்லவும், பின்னால் வந்த வில்லி இக்காட்சியைக் கண்டு வருந்தினான். அவ்வளவில் திருமகள்நாதனின் அருளால் வில்லியின் தம்பி கண்டன் உயிர் பெற்றெழுந்ததோடு, வில்லி பெருஞ்செல்வமும் பெற்றான். அதனால் அவன் அந்த இடத்தில் திருமாலுக்கு உயர்ந்த ஒரு கோயிலை எழுப்பினான்;அக்கோயிலைச் சூழப் பல அழகிய தெருக்களை அமைப்பித்து, அக்கோயிலைச் சூழப் பல அழகிய தெருக்களை அமைப்பித்து, அத்தெருக்களில் எழிலார் மாடங்களை உடைய வீடுகளையும் கட்டுவித்தான்;பின்பு புத்தூரில் உள்ளாரை அவ்வூரில் குடியேறச் செய்து, குடியேறியவர்களது ஊராகிய புத்தூர் என்பதோடு தன் பெயராகிய வில்லி என்பதையும் சேர்த்து, 'வில்லிபுத்தூர்'என்று அத்திருப்பதிக்குப் பெயரிட்டுக் கோயிலின்கண் சிறப்பாகப் பூசை செய்தற்குரிய வழிகளையும் செய்து முடித்தான். அப்பதியைச் சூழ்ந்த இடத்திற்கு 'மல்லிநாடு'என்ற பெயரைத் தனது தாயின் நிளைவாக வில்லி பெயரிட, அப்பெயரே அந்நாட்டிற்கு வழங்கப்பெறுவதாயிற்று.

பெரியாழ்வார்
வில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர் என்னும் முன்குடுமிச் சோழிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்தி வந்தகாலத்தே, திருமகள்நாதனின் அருளால் அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அந்த ஆண்மகவே பிற்காலத்தில் போற்றிப் புகழப்படும் பெரியாழ்வார் ஆவார்.

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் (A. H. 7- ஆம் நூற்றாண்டில்) குரோதன ஆண்டு ஆனித் திங்கள், வளர்பிறையில் பொருந்திய ஏகாதசி திதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ கருடாமிசராய் அவதரித்தருளினார். 

பெற்றோர் இவருக்கு விட்டுசித்தன் என்ற பெயரை வைத்துத் தக்க வயதில் கல்வி கற்பிக்கத் தொடங்கினர். பின்னர், இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த பொருட்குவியலினின்றும் ஒரு பெரும்பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி வருவாராயினார்.

ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது புதர் மண்டியிருந்த இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, துளசி செடியின் அடியில் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழகிய பெண் குழந்தை கிடப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்த குழந்தையை எடுத்து அதற்கு ‘கோதை‘ என்று பெயர் சூட்டி அன்போடும், பாசத்தோடும் வளர்த்து வந்தார்.

கோதை என்ற ஆண்டாளை திருமாலின் திருக்கதைகளை சொல்லியே வளர்த்தார் பெரியாழ்வார். அதனால் ஆண்டாளுக்கு, ஆயவனான அரங்கன் மீது ஆசை ஏற்பட்டு, அது காதலாக மாறி, அவனைக் கரம்பிடிக்கும் பாக்கியமும் பெற்றாள். ஆண்டாள், விஷ்ணு சித்தரை ஒரு தகப்பனாக மட்டும் பார்க்காமல் தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டதால் ஆண்டாளுக்கு குருவருளோடு திருவருளும் கிட்டியது.

பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனை மணந்து, ஆழ்வாருக்கு 'திருமாலின் மாமனார்'' என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தாள்.

பொற்கிழி
அப்பொழுது பாண்டிய நாட்டில் வல்லபதேவன் என்னும் அரசன் செங்கோலோச்சி வந்தான். அவன் பாண்டியர்தம் குலத்திற்கு ஓர் எழில் மிக்க விளக்குப் போன்றவன், பல கலைகளைத் தேர்ந்தவன். அவன் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினான். எனினும், அவன் அறக்கள வேள்வியிலும் மாட்சிமை அடைய வழி யாது எனச் சிந்தித்து, உண்மைப் பொருளை உணர்தலே அதற்கு வழி என முடிவு செய்தான். அவ்வமயம் வேதவேதாந்தங்களைக் கற்க செல்வநம்பி என்னும் புரோகிதர் அரசனிடம் வர, அவரை நோக்கி அரசன், 'அந்தமில் இன்பத்தை எவ்வாறு பெறலாம்?'எனக் கேட்டான். அதற்கு மறைவராகிய செல்வநம்பி, 'வேதமுடிவாகிய பரம்பொருள் இன்னது என்பதை வித்துவான்கள்மூலம் நிச்சயித்து, அவ்வழியாலே பெறலாம்'என்று அறிவிக்க, அரசனும், 'அங்ஙனமே ஆகுக'என்றான். பின்னர் அரசன் தனது அரியணைக்கு முன்புறத்தில் ஒரு தோரணக் கம்பத்தை நட்டு, கீழிச்சீரையிலே பெரும் பொற்குவியலை இட்டு, அப்பொற்கிழியை அக்கம்பத்தில் கட்டித் தொங்கவிட்டு, 'தாம் கூறும் உண்மைப் பொருளால் இப்பொற்கிழி தானே அறுந்துவிழும்படி எவர் செய்கின்றாரோ அவருக்கு இப்பொற்கிழி உரியதாம்'என்று எல்லா இடங்களுக்கும் பறையறைந்தும், தூதர்கள் மூலமும் அறிவித்தான். பலர் வந்து சொல்மாரி பொழிந்தும் பொற்கிழி அறுபடவில்லை.

திருமகள்நாதன், விட்டுசித்தர் கனவில் தோன்றி, பாண்டியன் அவைக்குச் சென்று பொற்கிழி தானே அறும் வண்ணம் உண்மைப் பொருளை உணர்த்தும்படி அறிவிக்க, அங்ஙனமே விட்டுசித்தரும் இறைவன் பணியை மேற்கொண்டு, மறுநாள் காலை பாண்டியனது நகர் சேர்ந்தார். பாண்டிய வேந்தனாகிய வல்லபதேவரும், செல்வநம்பியும் சென்று விட்டுசித்தரை வரவேற்றனர். விட்டுசித்தரைக் கண்ட அரசன் வணங்கி, 'அருளிற் சிறப்புடையீர்!தங்கள் வருகையால் என் மனம் மகிழ்ச்சியுற்றது'என்று கூறினான். அரசனது அவையில், அரசன் விட்டுசித்தருக்குச் சிறந்ததோர் இருக்கை ஈந்து அமரச் செய்தான்.

அப்பொழுது அங்கிருந்த புலவர்கள் விட்டுசித்தரை அவமதிக்கும் முறையில் பார்த்து, "கற்றார் அவையில் சென்று ஒன்றினைக் கூறுதலால் உண்டாகும் இழிவை எண்ணாது வந்தமை, 'குருட்டுக்கண் இருட்டைக் கண்டு அஞ்சுமோ?'என்ற பழமொழிக்கு ஒப்பாக உள்ளது"என்று தங்களுக்குள் விட்டுசித்தரைக் குறித்து உரையாடிக்கொண்டனர். புலவர்கள் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில், அரசன் குறிப்பின்படி செல்வநம்பி, விட்டுசித்தரை நோக்கி, 'தங்கள் வேதமுடிவாயுள்ள உண்மைப் பொருளைஎங்களுக்கு உணர்த்தல் வேண்டும்"என உரைத்தார்.

வைகுந்தவாசனாகிய திருமாலின் திருவருள் பெற்றதன் காரணமாக அவையின் இடையில் வந்து வணக்கம் கூறிய விட்டுசித்தர், வேதமுடிவாயுள்ள உண்மைப் பொருளை தம் சொற்கள் கொண்டு விளக்கவுரை ஆற்றினார். விட்டுசித்தரால் ஆற்றப்பட்ட அவ்விளக்கவுரை, கேட்டார்ப் பிணிக்குத் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொற்களால் அமைந்த ஆய்வுரையாகவும், அவரால் கூறப்பட்ட சொற்கள் யாவும், பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுந் தன்மையில்லாமல் விழுமிய பொருள் பொதிந்ததாகவும், உண்மைப் பொருளை உணர்தற்கு ஏற்றதாகவும் இருந்தது. உடனே பொற்கிழி கட்டியிருந்த கம்பம் பொற்கிழி இவர் அருகு வரும்படி வளையலாயிற்து. விட்டுசித்தரும் பொற்கிழியை அறுத்துக்கொண்டார். வேந்தனும், செல்வநம்பியும், ஏனையோரும் விட்டுசித்தரை வணங்கிப் போற்றினர்.

பட்டர்பிரான்
பின்னர் அரசன் கட்டனையினால் ஏவலர் அந்நகர மாடங்கள்தோறும் கொடிகளை ஏற்றி, தோரணக் கம்பங்கள் நாட்டி, மலர் மாலைகள் கட்டித் தொங்கவிட்டனர். வல்லபதேவனாகிய பாண்டிய மன்னன் விட்டுசித்தருக்கு 'பட்டர்பிரான்' என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர் உலா வரச் செய்தான். விட்டுசித்தர் உலாவிவரும் வீதிகள் யாவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. 'வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்'என்னும வாழ்த்தொலிகள் முழங்க, விட்டுசித்தர் வீதிகள்தோறும் உலாவந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.

அங்ஙனம் உலாவருதல் நிகழ்ந்தகாலத்து, பரமபதத்தின் தலைவனாக விளங்கும் உலக ரட்சகரான திருமாலனவர் அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழக் கருடன் மீது இவர்ந்து வந்து, விட்டுசித்தருக்கும் அரசருக்கும் காட்சியளித்தார்.

முதலும் ஈறும் இல்லாத முதற்பொருள் ஆகியவரும், அமரர்கள் அதிபதியும், உயர்வுற உயர்நலம் உடையவரும், பரமபதத்தில் சித்தரும் முத்தரும் சேவிக்க விளங்கும் பரம்பொருள் ஆனவரும் பீதாம்பரதாரியுமாகிய பரந்தாமனது எழிலைக் கண்ணுற்ற விட்டுசித்தர் என்னும் நாமம் கொண்ட பட்டர்பிரான், அன்பின் மிகுதியினால், இறைவன் எழில் நிலை பெற்றிருக்கும் வகையில் பல்லாண்டு பாடி வாழ்த்துவாராயினார். 

"பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக் கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதமாகிவிடுமே'' என்று தன் பொருட்டு கருடாரூடனாக காட்சியளித்த திருமாலின் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வாரின் மனத்தில் ஒரு பயம் ஏற்பட்டது. பார் புகழ் பரந்தாமனின் இந்தக் காட்சியைக் காணும் உலகத்தோரால் கண்திருஷ்டி படுமே என்று கவலைப்பட்டார். உடனே வாழ்த்து சொல்லி 'பல்லாண்டு' பாட ஆரம்பித்துவிட்டார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவன் திருமார்பினில் திகழும் திருமகளுக்கும், திருவாழியாழ்வானுக்கும், சங்காழ்வானுக்கும் பல்லாண்டு பாடினார்.

வடபெருங்கோயிலைப் புதுப்பித்தல்
மன்னர் அரசனிடமும் செல்வநம்பியிடமும் விடைபெற்றுக்கொண்டு, வில்லிபுத்தூரை அடைந்த விட்டுசித்தர் கிழியறுத்துக் கொணர்ந்த பொன்னைக் கொண்டு வடபெருங்கோயிலைப் புதுப்பித்து அதனை அங்குள்ள திருமாலுக்கே ஆக்கினார். 

பெரியாழ்வார் திருமொழி
பின்பு கண்ணனது திருஅவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்தப் பாசுரங்கள் நூனூற்று அறுபத்தொன்று ஆகும். திருப்பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு ஆகும். ஆக விட்டுசித்தரால் பாடப்பட்ட பாசுரங்களின் எண்ணிக்கை நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள் 'பெரியாழ்வார் திருமொழி'என்று வழங்கப்பட்டு, நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் முதற்கண் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணாவதாரத்தின் மீது ஈடுபாடு விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைவிட பெரியாழ்வாருக்கு கிருஷ்ணாவதாரத்தின் மீது ஈடுபாடு அதிகம். கிருஷ்ணனின் பால்ய லீலைகளைப் பாடியவர், தன்னை யசோதையாக பாவனை செய்து கொண்டு, அவனுக்கு நீராட்டல், பூச்சூட்டல், காப்பிடல் என்று திருவாய்மொழிகளை அருளிச் செய்துள்ளார்.

விட்டுசித்தர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால்,
'பெரியாழ்வார்'என்று இவரை வைணவப்பெரியார்கள் கூறலாயினர்.
பெற்றோரால் விட்டுசித்தர் என்று வழங்கப்பட்ட இவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:1. பெரியாழ்வார், 2. பட்டர்பிரான், 3. ஸ்ரீ வில்லிபுத்தூர்கோன், 4. கிழியறுத்தான், 5. புதுவைக்கோன்.


பெரியாழ்வார் திருமொழி




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

(812)
எனத் திருப்பல்லாண்டு தொடங்குகின்றது. இக்காப்புப் பாசுரம் திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் காப்பாக அமைந்து, ஆழ்வார்களின் நோக்கம் திருமாலின் திருவடி அடைவது என்பதைக் காட்டுகிறது.

அந்தியம் போதில் அரியுரு வாகி
அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதுமே

(6:3-4)
(அந்தியம் போது = மாலை நேரம், அரியுரு = நரசிங்கம். அரி =பகைவன், பந்தனை = வாட்டம்)
என்பர். இறைவனிடம் அடியவர்களும் மக்களும் தங்கள் வேண்டுதலைச் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ பெரியாழ்வார் நரசிம்ம அவதாரம் செய்த வாட்டம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என அழைப்பது தாய்மை கலந்த பக்தியின் எல்லை எனலாம்.
தாயாகிய பெரியாழ்வார்
பல்லாண்டு பாடி வாழ்த்தியவர் தாயாகி கிருஷ்ணாவதாரத்தின் பல்வேறு செயல்பாடுகளில் மனம் தோய்ந்து பக்திச்சுவை ததும்பப் பாடியிருக்கிறார்.
கண்ணனைக் குழந்தையாக எண்ணி அளவிலா அன்புடன் குழந்தையின் எல்லாச் செயல்களிலும் மனம் தோய்ந்து பாடியுள்ள பாசுரங்கள் இதயத்தை ஈர்க்கும் பாங்கின. பெரியாழ்வார் யாருக்குத் தாயாகிறார்? சகல உயிர்களுக்கும் அருள் செய்யும் பகவானுக்கே தாயாகிறார். எத்தனை உயர்ந்த உள்ளம்!.
கண்ணனை ஒரு தாயின் நிலையிலிருந்து பாடுகிறா ர். தாய் நிலையைத் தாலாட்டுப் பாடுதல், நிலவு காட்டுதல், இரண்டு கைகளைச் சேர்த்துச் சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமரும் குழந்தையை வைத்து விளையாடுதல், அப்பூச்சி காட்டுதல், காது குத்தல், நீராட்டுதல் எனப் பல நிகழ்வுகளை ஒட்டியே பாடியிருக்கிறார். இவை குழந்தைகளுக்கு உரிய செயல்களல்லவா? அவற்றை இந்தத் தாய் எப்படி அனுபவிக்கிறாள்? சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?
கண்ணனைப் பற்றிய முழுக் குறும்படமாகப் பெரியாழ்வார் பாசுரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. காட்டாகச் சில பாசுரங்கள் பற்றிக் காண்போம்.
தொட்டிலில் கண்ணன்
மாடங்கள் நிறைந்துள்ள திருக்கோட்டியூரில் கண்ணன் பிறந்த இல்லம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது (14).

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்!

(21)
(மருங்கு = இடுப்பு, புல்கில் = அணைத்தால் உதரம் = வயிறு)
எனத் தாயாகிய ஆழ்வார் குழந்தைக் கண்ணனின் குறும்பைக் காட்சிப் படுத்துகின்றார். நாமும் அக்காட்சியைக் கண்டு களிக்க முடிகிறதல்லவா?
இப்பாவனை கிருஷ்ண அவதாரப் பொலிவில் ஈடுபட்ட பெரியாழ்வாருக்குக் கைவந்த கலையாக அமைந்து பின் வந்த கவிஞர்கள் பிள்ளைத்தமிழ் என்ற ஒரு சிற்றிலக்கிய வகையைத் (Genre) தோற்றுவிக்க வித்திட்டது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறு கொண்டு அறியலாம்.
சின்னஞ்சிறு குழந்தையைத் தாய் அங்கம் அங்கமாகக் கண்டு மகிழ்வது போலத் தாயாகிய பெரியாழ்வாரும் மகிழ்கின்றார். அதுமட்டுமல்ல தாம் கண்டு மகிழ்ந்தது போல் ஆய்ப்பாடிப் பெண்களும் ரசிக்க வேண்டுமென்று ‘ காணீரே’ என அழைக்கின்றார்.
தாலாட்டு
தாயாகிய பெரியாழ்வாரின் தாலாட்டு குழந்தை தொட்டிலில். தாய் தாலாட்டுப் பாடுகிறாள். எப்படி? கீழ்வரும் பாடலைப் படித்துப்பாருங்கள்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!

(44)
(ஆணிப்பொன் = சிறந்த பொன், குறளன் = வாமன், (வாமன அவதாரச் செய்தி) வையம் அளந்தான் = உலகத்தை அளந்தான்)
குழந்தைக்குத் தேவர்களும் தேவியரும் பலவிதமான அணிகலன்களைத் தந்தனர். அவற்றால் காக்கும் கடவுளான குழந்தையை அழகுக்கு அழகு செய்தனர்; அதன் அழகில் பெரியாழ்வார் தம்மை மறக்கின்றார். நாட்டுப்புற மக்கள் அன்றாட வாழ்வில் தம் குழந்தைகளுக்குப் பாடிய தாலாட்டுப் பாடல் வடிவத்தை ஆழ்வார் பயன்படுத்திக் கொண்டு பக்தியோடு பண்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

அம்புலி அழைத்தல்


அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதி யேல்
மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடிவா

(55)
(மஞ்சு = மேகம், மாமதீ = நிலவே)
என நிலவை வேங்கடவாணன், சக்கரக்கையன், ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் (சிறுவன்), வெண்ணெய் விழுங்கிய பேழை வயிறனை இடுப்பில் வைத்துக் கொண்டு விளையாட அழைக்கின்றார்.
சப்பாணி
குழந்தையை இருகைகளையும் சேர்த் துத் தட்டுமாறு வேண்டுவது சப்பாணிப் பருவம் ஆகும். குழந்தையை பார்த்து,

பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே! சப்பாணி

(80)
(பட = அழிய, பஞ்சவர் = பாண்டவர், தேவகி = கண்ணனைப் பெற்ற தாய், யசோதை = வளர்ப்புத்தாய்)
கொட்டச் சொல்லி, குழந்தையின் கை அசைவில் இன்பம் துய்க்கின்றார் ஆழ்வார்.
புறம்புல்கல்
புறம்புல்கல் என்பது முதுகுக்குப் பின்னால்
இருந்து அணைத்துக் கொள்வதைக் குறிக்கும். ஆழியங் க ையனை, அஞ்சன வண்ணனை, மார்பில் மறுவனை (மறு=மச்சம்), நச்சுவார் (விரும்புபவர்) முன் நிற்கும் நாராயணனை (107) அழைத்து, முதுகில் அணைத் துப் படுத்துக் கொள்ளும் குழந்தையின் கொள்ளை அழகைப் பேசும் பெரியாழ்வாருக்கு நிகர் பெரியாழ்வார்தான்.
அப்பூச்சி
பஞ்ச பாண்டவர்கள் பத்து ஊர்கள் பெறாத அன்று பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூதுவனாய்ச் சென்று பாரதப்போர் செய்த தூதன் அ ப்பூச்சி (கண்பொத்தி) காட்டுகின்றான் (118).

கொங்கைவன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

(125)
(குவலயம் = உலகம், கரி = யானை, பரி = குதிரை, இராச்சியம் = நாடு (அயோத்தி), கான் = காடு)
என்று மகாபாரத, இராமாயண நிகழ்வுகளைக் குழந்தைக் கண்ணனின் பொலிவைச் சுட்டப் பின்புலம் ஆக்குகின்றார் பெரியாழ்வார்.
• நீராட்டல்
குழந்தையை நீராட்டும் முறை (152-161) பக்திக் கனியாகவும் வரலாற்றுப் பேழையாகவும் உள்ளது. சீயக்காய் (புளிப்பழம்) கொண்டு, நெல்லிமர இலையைப் போட்டு காய்ச்சிய வெந்நீர் கடாரம் (அண்டா) நிறைய வைத்து நீராட்டினர்.
‘அப்பம் கலந்த சிற்றுண்டி வெல்லம் பாலில் கலந் து சுட்டுவைத்தேன். உண்ணக் கனிகள் தருவன், ஒலிகடல் ஓதநீர் (அலைநீர்) போல வண்ணம் (நிறம், பண்பு) அழகிய நம்பீ! மராமரம் சாய்த்தவனே! திருவோண நாளாம் இன்று நீ நீராட வேண்டும்’ (156, 157) என யசோதைத் தாயாகிய ஆழ்வார் இறைஞ்சுகின்றார். அவதார நாயகனுக் குத் தமிழகக் குழந்தையின் வளர்ப்பு முறையை ஏற்றும் போது, தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காது குத்தல், தொட்டிலிடுதல், குழந்தை உணவு, யானைத் தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல், பூச்சூடல் பற்றிய செய்திகள் பதிவாகிப் பாசுரத்தி ற்குப் பொலிவும், படிப்போர்க்கு நெகிழ்வும் ஈடுபாடும் தோன்ற வழி செய்து விடுகின்றன.
கண் போன்ற கோதையை அருமையாய் வளர்த்தவர் பெரியாழ்வார். அவளைச் செங்கண்மால் கொண்டு போனதை எண்ணி, மனத்தில் பாசம் மேலோங்கத் தவிக்கும் தவிப்பைப் பல பாசுரங்கள் விளக்குகின்றன (297-304).

ஆண்டாளைப் பிரிந்த ஆழ்வார்



ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான்
(125)
எனவே, யசோதை என் மகளை மருமகளாகக் கொண்டு உவந்து சீர் செய்வாளோ என எண்ணுகிறாள் ஆய்ச்சியாகிய ஆழ்வார். கிருஷ்ணாவதாரத்தில் தம்மை மறந்து ஈடுபட்ட பெரியாழ்வார் இராமாவதாரத்தையும் சுட்ட மறக்கவில்லை (320-322).

• நாமப் பெருமை
திருமாலின் நாமத்தைக் கூறாதவர்கள் அடையும் இழப்பையும் அவன் நாமத்தைக் கூறுபவர்கள் அடையும் நன்மையையும் கீழ்வருமாறு விளக்குகிறார்.
சிரீதரா, மாதவா, கோவிந்தா, தாமோதரா, நாரணன், கண்ணன் என்பன போன்ற திருநாமம் இட்டால் அவர்களின் அன்னை நரகம் செல்ல மாட்டாள். எனவே மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிடப் பேரிட்டு, அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் (387), உங்கள் பிள்ளைக்கு என் முகில் வண்ணன் பேரிடுங்கள் (389) வைகுந்தம் செல்லலாம் என்பர்.
• வழிபாடு
நாமப் பெருமையைக் கூறியவர் எப்படி வழிபாடு செய்கிறார்?
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு
ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!
(423: 3-4)
(எய்ப்பு = களைப்பு)
எனப் பாடுகின்றார். எந்த ஒரு ச ெயலுக்கும் அல்லது நிகழ்வுக்கும் இடமும் காலமும் இன்றியமையாதது. முதுமையில் நினைக்கும் வாய்ப்பு குறைவு. ஏனெ னில் ஐம்புலன்கள் ஒடுங்கிப் போ கும்; நினைவு இழக்கும்; ஒளி குன்றும்; அவை தம் வழிக்கு வாரா என்பதை உணர்ந்து இளமையில் மனம் எப்பொழுது இறைவனை நினைக்கும் உணர்வு நிலைக்குச் செல்லுகிறதோ அப்பொழுது அதன் குறிப்பறிந்து இறைவனிடமும் தம் வேண்டுகோளை வைத்து விடுகின்றார்.

சொல்லலாம் போதேஉன் நாமம் எல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!

(425: 3-4)
என வேண்டும் ஆழ்வார் தம் உள்ளக் கு றிப்பைத் தெரிவிக்கிறார். அத்துடன் தாம் ப ெற்ற இன்பத்தை நாமும் பெற நம்மையும் அரங்கனை வழிபட நெறிப்படுத்துகின்றார். பிறவி ப் பிணியை நீக்கும் மருத்துவனா ய் நின்ற மாமணி வண்ணனிடம் இதைவிட வேறெதைக் கேட்பது?


உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினையே
(471)


மருத்துவன்
கிருஷ்ண அவதாரப் பொலிவைப் பேசுவதில் பெரியாழ்வார் தாம் பெரிய ஆழ்வார். பெரியாழ்வாரின் (தாலாட்டு) உவமை, எளிமை போன்ற கூறுகள் பக்திக்கு அழகு கூட்டுகின்றன.
குலசேகர ஆழ்வா
ர் அரசர் என்பதால் அரசனான தசரதனை நினைக்க, ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் தாய்மை நிலையில் தோய்ந்து பாசுரம் பாடினார் போலும்!
தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும், செவிலித் தாயா கவும் இப்படிப் பல தாயர்களின் கூற்றுகளில் அமைந்து ள்ள பெரியாழ்வார் பாசுரங்கள் பக்தி உணர்வின் பெட்டகம், அன்புக் களஞ்சியம் எனலாம்.
 Home  Previous                                                                     
                                                            Next

No comments:

Post a Comment