December 19, 2014

Sri Andal - Part 2

ஆண்டாள் - Part 2 Alwar 9


Courtesy: Tamilvu


ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசித் தோட்டத்தில் குழந்தைப்பேறு இல்லாத பெரியாழ்வாரால் கண்டு எடுக்கப்பட்டவர் . அவர் கோதை எனத் திருநாமம் இட்டுவளர்த்து வந்தார்.




• சூடிக் கொடுத்தவள்


ஆழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்தது பெருமானுக்கு உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, "அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையே வேண்டும்" என வும் பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என நினைத்து ஆண்டாள்’ எனவும் திருநாமம் இட்டார்.
பெரியாழ்வார் வடபெருங்கோவில் உடையானுக்குச் சாத்துவதற்காகத் தொடுத்து வைத்த மாலையைத் தாம் அணிந்து பின் இறைவனுக்குச் சாத்தியதால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் திருநாமம் இட்டு அடியார் அழைத்தனர்.


• காலம்

ஆண்டாள் அவதாரம் செய்த நாள் நளவருடம், ஆடிமாதம் கூடிய
பூர நட்சத்திரத்தில், இக்குறிப்பின்படி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

அருளியவை:
ஆண்டாள் அருளிய திவ்வியப்பிரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் ஆகும். ‘கோதை தமிழ் ஐயைந்தும் (5 x 5) ஐந்தும் (5) அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு’ என்பதால் திருப்பாவையின் பெருமை புலப்படும்.
4.5.1 திருப்பாவை



• பாவை நோன்பு

திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.
காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை நோன்பு பெண்மக்கள் எடுக்கும் நோன்பு ஆகும்.
கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள் தன்னை ஆய்ப்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.
 திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு
எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.
அந்நோன்பைப் பற்றித் திருப்பாவை, நிகழ்ச்சி அடிப்படையில் பதிவு செய்துள்ளது.


• மன நிலை

ஆண் அடியார்கள் இறைவனைத் தலைவனாகவும், தம்மைத் தலைவி ஆகவும் பாவித்துக் கொண்டு பாடுவது நாயக-நாயகி பாவம் என்று அழைக்கப்படும். இங்கு ஆண்டாள் இயல்பாகவே நாயகி நிலையில் நின்றாள். ‘மானிடவனை மணாளன் ஆக்கி வாழமாட்டேன்’ என்று முடிவு செய்த ஆண்டாளுக்கு மடை திறந்த வெள்ளம் போல் காதல்/பக்தி பெருக்கெடுத்து ஓடுகின்றது. எனவே இதைப் பள்ளமடை என்றும் சிறப்பித்துக் கூறுவர்.

• செய்வனவும் தவிர்ப்பனவும்

கண்ணனைச் சென்று காணும் போது அவனையே ஒரு மனத்தோடு நினைக்கும் மனநிலை வேண்டும். அதனால் நெய், பால் உண்ணாமல் கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலுக்கு மலர் சூடாமல், பிறர் குறைகளைப் பேசாமல், நல்ல நோக்கம், நல்ல எண்ணம், நல்ல செயல் உடையவராக நம்மைத் தயாராக்கிக்
கொள்ள வேண்டும் என்கிறாள்.

• ஆய்ப்பாடி நிகழ்வு

நோன்பு நோற்க வேண்டி, ஆய்ப்பாடிச் சிறுமிகள் வீடுவீடாகச் சென்று தோழிகளைத் துயில் எழுப்பி வருகின்றனர். அப்பொழுது ஆய்ச்சியர் பொன்வளை ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடைகின்ற இளங்காலைப் பொழுதில் அந்தத் தயிர் அரவம் கேட்டிலையோ? (480) எனச் சொல்லி, கேசவனைப் பாட வா என அழைக்கின்றனர்.

• பாவை நோன்பின் நோக்கம்
உலகத்தவர் வாழ மழை பொழிய வேண்டும். அத்துடன் நாங்கள் மார்கழி நீராட மழை வேண்டும் என மண் வளத்தோடு மனித குல வளத்திற்கும் வேண்டுகின்றனர்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து


(476:1-3)

எனப் பாவை நோன்பின் நோக்கத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது பாசுரம்.


4.5.2 ஆய்ப்பாடி - திருவில்லிபுத்தூர்
கண்ணனின் தந்தை நந்தகோபனுடைய அரண்மனையை அடைந்து வாயிற் காவலன் அனுமதியுடன் உள்ளே நுழைந்து நப்பின்னையை எழுப்புகின்றனர். (தாயார் மூலம் பெருமாளின் திருவருள் பெறுவதற்குச் செய்யும் முயற்சி)


• கோவிந்தன் பெருமை
ஓங்கி உலகை அளந்தவன், கேசியைக் கொன்றவன், தென் இலங்கை அரசன் இராவணனை அழித்தவன் , பறவை உருவில் வந்த பகாசுரன் என்னும் அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன் (486) என்றெல்லாம் தந்தை பெரியாழ்வாரைப் போலவே அவதாரங்களுக்கும் செயல்களுக்கும் மங்களாசாசனம் (போற்றுதல்) செய்கிறாள் ஆண்டாள்.

• வேண்டுவன
நாராயணனே நமக்குப் பறை தருவான் (474), வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆகிய செல்வம் (476), பால் போன்ற நிறமுடைய பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள், பரந்து ஒலி எழுப்பக்கூடிய தோல் கருவியாகிய மிகப் பெரிய பறை, திருப்பல்லாண்டு பாடுபவர்கள், கோல விளக்கு, கொடி, விதானம் (499) போன்றவற்றுடன் ஆல் இலையில் துயின்றவனை வழிபாடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடன் நிற்கின்றனர் ஆய்ச்சியர்.

• நோன்பு நோற்கும் இடம்

பாவை நோன் பை (475, 476) ஆய்ப் பிள்ளைக ள் பாவைக் களத்தில் (486) ஒன்று சேர்ந்து மேற்கொள்வர். பாவை நோன்பு அல்லது வழிபாடு செய்யும் இடத்தைப் பாவைக்களம் என்று அழைக்கின்றனர்.

• நோன்பு நிறைவடைதல்

நோன்புக்கு முன்பு கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சி ‘நெய் உண்ணோம், பால் உண்ணோம்' என்றாள். அவனைப் பெற்ற பிறகு,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்று அனைய பல்கலனும்யாம் அணிவோம்
ஆடை உடுப்போம். அதன் பின்னே பால் சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

(500:4-8)

(சூடகம் = தோளில் அணியும் அணி, பாடகம் = காலில் அணியும் அணி)

என்று கிடைத்தவற்றை உள்ளம் உவந்து சுட்டுகின்றாள்.


• நோன்பின் பயன்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்தில் உன்னைப் பெறும்படியான புண்ணியம் யாம் உடையோம் (501), எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உறவுடையவர் ஆனோம், உனக்கே தொண்டு செய்வோம் (502), எங்கள் பிற விருப்பங்களை மாற்றுவாயாக (495),

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
(478: 7-8)

கடந்த காலத்தில் செய்த பிழைகளும் இனிவரும் நாட்களில் செய்யப் போகும் பிழைகளும் தீயினில் தூசாகும் என்று அருமையான உவமையைப் பயன்படுத்துகிறாள். தீ தானும் தூயதாய் தன்னிடத்து வரும் பொருள் எப்படிப்பட்டதாயினும் அதையும் தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அப்படியாயின் தன் பிழைகள் தூசாகவும் இறைவன் பேரருட்திறன் தீயாகவும் உவமித்துக் கூறுகிறாள். எப்படிப்பட்ட பிழையாயினும் அவை ஒன்றுமில்லாமல் போகும் என்கிறாள். நோற்றால் மக்கள் நலனுற மழை பெய்யும்; சுவர்க்கம் புகலாம் என்றும் கூறுகிறாள். 

4.5.3 நாச்சியார் திருமொழி
தோழியரோடு பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் தன்னுள்ளம் கவர்ந்த நாயகனைப்பற்றியும் அவன்மீது தனக்கிருந்த ஆராக்காதல் பற்றியும் பேசுகிறாள். அவனின்றித் தான் வாழ இயலாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பாடுகிறாள். அவனை மணந்து கொண்டு வாழ்வதாக இனிய கற்பனை செய்கிறாள். இப்பகுதியில் அகப்பொருள் துறைகள் பல காணக் கிடக்கின்றன. ஆண்டாள் நாயகியாகித் திருமாலை அடையத் துடிக்கின்ற பெண்; தன்னை வளர்த்த பெரியாழ்வாரிடம் தன் தலைவன் யார் என்பதைத் தெளிவாக உணர்த்தி விடுகின்றாள். அதனாலேயே அந்தத் தலைவனையே அடைய வேண்டுமென்ற தீராக் காதலால்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே!
(508:3-4)

எனச் சொல்லிக் காமனைத் தொழுகின்றாள்.
வானில் வாழுகின்ற தேவர்களுக்கு மறையவர் வேள்வியில் சொரிந்த அவி உணவைக் காட்டில் திரியும் நரி புகுந்து உண்ணத் தலைப்பட்டால் எப்படி இருக்குமோ அதுபோலத் திருமாலுக்கென்று தோன்றிய உடம்பை மானிடன் தீண்டுவது பொருத்தமற்றது; தகாதது. எனவே, மனிதர்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் உயிர் வாழமாட்டேன் என்கிறாள்.

நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமல்ல; அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை; இலக்கிய மரபுகளைப் பதிவு செய்துள்ள வரலாற்றுச் சிறப்புக்குரியவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. நாயகியாகிய ஆண்டாளின் உணர்வுகளைப் புலப்படுத்தும் பக்திப்பேழை. 

• விளக்கினில் புக வேண்டுதல்
‘தை மாதம் முழுவதும் மன்மதன் வருமிடத்தைச் சுத்தம் செய்து, கோலமிட்டு, நுண் மணல்கொண்டு தெருவை அலங்கரித்து வைத்துள்ளேன். காமனையும் அவன் தம்பி சாமனையும் தொழுகின்றேன். சக்கரக் கையையுடைய வேங்கடவனுடன் இணைய நீ விதிக்க வேண்டும் (504) என்று மன்மதனைத் தொழுகின்றாள். மலர் கொண்டு மூன்று வேளையும் உன்னை வணங்குகின்றேன்.

வித்தகன் வேங்கட வாண னென்னும்
விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே
(506)

என ஏங்குகின்றாள் கோதை .
கண்ணனை நினைத்துப் பாடும் பாசுரங்களில் உள்ளம் விளக்காகி ஆண்டாளின் உணர்வு நெய்யாகி உணர்வுப் பிழம்பாகப் பாசுரம் பொலிவு பெறுகிறது.


• கோபியர் ஆடை வேண்டல்

‘கோழி கூவும் முன்னே குடைந்து நீராட வந்தோம்; அரவணை மேல் பள்ளி கொண்டவனே! காளிங்கன் என்னும் பாம்பின் மேல் குதித்து ஆடியவனே!


குருந்திடைக் கூறை பணியாய்


(525:4)

(குருந்து = மரம். கூறை = ஆடை / உடை)
குருந்த மரத்தின் மேல் வைத்துள்ள உடைகளைக் கொடுப்பாயாக,

வேண்டியதெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்

பட்டைப் பணித்தரு ளாயே


(526)

எனக் கன்னியரோடு கரியபிரான் நிகழ்த்திய கிருஷ்ண அவதாரச் செயல்களை, ஆடை மேலிட்டுத் தன் உள்ளத்துணர்வை வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்.


4.5.4 கண்ணனிடம் காதல்

தலைவன் தலைவியுடன் வந்து சேருவானா என்பதை அறியப் பெண்கள் கூடலிழைப்பது வழக்கம். இது அகத்துறையில் இடம் பெறுவது. திருமழிசை ஆழ்வாரும் தம்மை நாயகியாக எண்ணிக் கூடலிழைத்தல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. தலைவன் தலைவியிடையேஎழும் காதல் உணர்வுப் போராட்டத்தைப் புலப்படுத்தும் ஓர் உத்தியாகக் கூடலிழைத்தல் நிகழும். ஆண்டாளும் திருமாலைக் கூட, கூடலிழைத்துப் பார்க்கிறாள் (538).வாமன அவதாரத்தையும் கண்ணன் அவதாரத்தில் நிகழ்த்திய செயல்களையும், சிசுபாலன், மருதமரங்கள், ஏழு எருதுகள், பகாசுரன், கம்சன் போன்றோரை அழித்தவற்றை எடுத்துச் சொல்லியும், தேவகி வசுதேவன் பெற்ற கண்ணனிடம் தன் காதலைக் கூடலிழைத்தலின் மூலம் வெளிப்படுத்துகின்றாள் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்’ .


• குயிலே! கருமாணிக்கம் வரக்கூவாய்

வெண்மையான சங்கை இடக்கையில் ஏந்திய விமலன் எனக்குத் தன் உருக்காட்டவில்லை; ஆனால் என் உள்ளத்தில் புகுந்து நாள்தோறும் உயிரோடு வைத்து வாட்டுகின்றான்’ (546) . எலும்பு உருகி, கண்கள் இமைகளைப் பொருந்தாமல் பல நாளும் துன்பக்கடலில் புகுந்து வைகுந்தன் என்பதோர் தோணியைப் பெறாமல் துன்புறுகின்றேன் (548) . வில்லிபுத்தூரில் உறைவானின் திருவடியைக் காண வேண்டும் (549) என்ற ஆவலினால் குயிலினை அழைத்துத் திருமாலின் பெயரைக் கூறிக் கூவ வேண்டுகிறாள். 

அங்குயி லே! உனக் கென்ன மறைந்துறைவு?
ஆழியும் சங்குமொ ண் தண்டும்

தங்கிய கையவ னைவரக் கூவில் நீ
சாலத் தருமம் பெறுதி

அப்பாசுரம் தலைவன் பெயரைக் குயில் கூவ, அதைக் கேட்டு மகிழ, தன் ஆர்வம் தணிய வேண்டுகிறாள்.



பைங்கிளி வண்ணன் சிர
தர னென்பதோர்
பாசத் தகப்பட் டிருந்தேன்


(553)

எனத் தன் நிலையையும் தெளிவு படுத்துகிறாள்.


• கனவும் மணமும்

பக்தியும் காதலும் ஒரு சேரக் கொண்டிருந்த ஆண்டாளின் திருமணம் திருவரங்கனுடன் நடக்கின்றது.
ஆண்டாளின் கனவு உரைக்கும் பாசுரங்கள் ஆண்டாளின் தமிழுக்கும், அக்காலத் தமிழர் திருமண முறைக்கும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோ
ழி நான்

(556)

(வாரணம் = யானை) 
நாளை மணநாள் என நிச்சயம் செய்து, பாளையோடு கூடிய கமுகு (பாக்குமரம்) மரங்களால் அலங்காரம் செய்தனர்; இந்திரன் உள்ளிட்ட தேவர் கூட்டம் வந்திருந்து மணத்தை உறுதி செய்தனர்; மணப்புடவை உடுத்தி மணமாலை சூட்டினர்; நான்கு திசைகளில் இருந்தும்
கொண்டு வந்த தீர்த்தத்தால் நீராட்டி, பா ர்ப்பனர்கள் மந்திரங்களைச் சொல்ல, புனிதனாகிய கண்ணனோடு என்னை இணைத்துக் காப்புக் கட்டினர்; பெண்கள் மங்கல விளக்கும் கலசமும் ஏந்தினர்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழ! நான்


(561)

பின் தீவலம் செய்தோம்; நாராயணன் தம் திருக்கையால் என் தாள் (பாதம்) பற்றி அம்மி மிதிக்கச் செய்தார், உடன் பிறந்தோர் தீயின் முன் நிறுத்தி, அச்சுதன் கையின் மேல் என் கையை வைத்தனர், குங்குமம் பூசி, சந்தனம் தடவ வந்தோம் எனத் தன் மணக்கனவு பற்றித் தோழியிடம் சொல்லுகிறாள் ஆண்டாள். அக்கனவு வாழ்வது போலவே உணர்ச்சி மேலிட்டுக் கற்பனை செய்து அருளியவை ஆகும். 

• பாவையும் பாஞ்ச சன்னியமும்
இறைவனை விட்டு நீங்காது இருக்க வேண்டுமென்ற தாபத்தால் ஆண்டாள் ஆழிவெண்சங்கிடம் பேசுவது திருமாலின் மீது அவர் கொண்ட எல்லையில்லாத காதலை வெளிப்படுத்துகிறது. இறைமைக் காதலில்தான் இப்படியொரு பாசுரம் பிறக்க முடியும் எனலாம். அந்தப் பாசுரம்,

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே


(567)
ஓடும் மேகங்களைத் தூது விடும் ஆண்டாள், தான் வெறுங்கூடுதான்; உயிர் கண்ணனிடம் உள்ளது என்பதை, ‘உலங்குண்ட விளங்கனி போல்’ (உலங்கு - கொசு) என்னும் உவமை வழி அறிவிக்கின்றாள். விளங்கனியின் மேல் ஓடு இருக்க அதன் உட்பகுதியைக் கொசுஅழித்துவிடும். அதுபோ ல, ‘நானும் நலிந்துள்ளேன், கண்ணன் தந்த காதல் நோயால்’ எனத் தெளிவுபடுத்துகிறாள். 

‘மழைக்காலத்தில் எருக்கஞ்செடியில் உள்ள பழுத்த இலைகள் வீழ்வது போல நானும் வீழும் நிலையில் உள்ளேன். எனக்கு ஒருநாள் ‘தம் வாசகம் (சொல்) தந்து அருளமாட்டாரா? (584) ‘ஓர் பெண்கொடியை வதம் செய்தான்’ (585) என்னும் சொல் பழியாகாதா? என மேகத்திடம் தன் மோகத்தைச் சொல்லி அரற்றுகின்றாள் ஆண்டாள். எனவே அவள் தமிழும் மானுடம் பாடாமல் மாதவனைப் பாடுகின்றது.

யாவும் கண்ணனே 

திருமாலையே நினைத்து உருகும் ஆண்டாளுக்குத் திருமாலிருஞ் சோலையில் உள்ள மலர்களும் அவற்றின் வண்ணமும் அழகனை நினைவுபடுத்துகின்றன. ஆண்டாள், குயில், மயில், கருவிளை (காக்கணம் பூ) களங்கனி, காயாம்பூ ஆகிய ஐந்தையும்,

ஐம்பெரும் பாதகர்காள்!
அணி மாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய
நிறம் உங்களுக் கென் செய்வதே?

(590 : 3-4)

என்று கேட்டு விடுகின்றாள். அவை ஐந்தும் அவன் நிறத்தையே கொண்டவை. நோக்குமிடமெல்லாம் கண்ணனைக் காணும் கோதை 100 தடாவில் (அண்டாவில்) வெண்ணெயும் 100 தடாவில் அக்கார அடிசிலும் (சர்க்கரைப் பொங்கல்) வாய்நேர்ந்து (வாக்குறுதி தந்து) பராவி வைத்துள்ளேன் என அமுதுண்ண வரும் அழகரை விரும்பி நிற்கின்றாள்.


• கடலும் காமமும்

காந்தள் பூ, கோவைப்பழம், முல்லைப்பூ, பாடும் குயில், ஆடித் தோகை விரிக்கும் மயில், மழை ஆகியவற்றின் நிறத்தில், வடிவத்தில், ஒலியில், அழகில் கண்ணனைக் கண்ட ஆண்டாள்

உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென் றுரைத்தியே


(605:3-4)

(ஊறல் = உயிர், நடலை = துன்பம்)
இப்படி, பெருமான் உடலுள் புகுந்து உயிரை வாட்டிய போதும் அவனை விடமுடியாமல் அவள்படும் துன்பங்களைக் கருமுகில் வண்ணனிடம் சொல்ல வேண்டும் என்கின்றாள்.


4.5.5 அரங்கனும் ஆண்டாளும்

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்சொற்பொருளாய் நின்றார் என்மெய்ப்பொருளும் கொண்டாரே 
எல்லாப் பொருள்களில் இருந்தும், யாராலும் அடைய இயலாதவன். வேதத்தின் பொருளானவன்; என் மெய்யின் பொருளான உயிரையும் கொண்டான் எனத் தன் அணுக்கத்தைக் கூறுவாள் ஆண்டாள். 

• மாயவனும் கோதையும்
தேவகி-வசுதேவனுக்கு மகனாகப் பிறந்து, யசோதை-நந்தகோபனால் வளர்க்கப்பட்ட கண்ணனிடம் காதல் கொண்டேன். சுற்றத்தவராகிய நீங்கள் சொல்வதெல்லாம் என் காதில் விழாது.ஆகவே ‘மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின்’
(617)

குறளனானமாயனைக் கண்ணாரக் காணவேண்டும் ‘ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ (618) , 

‘துவராபதிக்கு (துவாரகை) என்னை உய்த்திடுமின்’ (625) 

எனத் தலைவன் இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள் எனப் பாடுகின்றாள் ஆண்டாள்.

 • வினாவும் விடையும்

கண்ணனின் குறும்புகளைச் சொல்லிக் கண்டீர்களா எனக் கேட்க, பிருந்தாவனத்தில் பரமனைக் கண்டோம் எனப் பதில் கூறும் பாங்கில் நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்துப் பாசுரங்களும் அமைந்து பொலிவூட்டுகின்றன. காட்டு:



கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்

புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே


(640)
(குப்பாயம் = சட்டை , வேர்த்து = வியர்த்து / வேர்வை) 
பொருள்: தாமரை போன்ற கண்களாகிய காதல் வலையில் வீழ்த்தி, என் நெஞ்சையும் உடன் அழைத்துச் சென்று விளையாடும் ஈசனைக் கண்டீரா? சட்டையை அணிந்து யானையின் குட்டிபோல் தோற்றம் கொண்டு வேர்வை துளிர்க்கவிளையாடுபவனை பிருந்தாவனத்தில் கண்டோம். 

மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன் கண்டாய் அம்மானாய் என்று சொல்கின்ற வகையில் 'நான் மனிதர்களை மணந்து கொள்ள மாட்டேன். ணந்தால் ரங்கநாதனோடு தான்' என்று சொல்லக் கூடிய ஒரு பக்குவத்தில் உண்மையாக பகவானைத் தேடிக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால், அந்த அரசனிடத்திலே சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரைக்கும் வழி எங்கும் தோரணங்கள் கட்டி பல்லக்கில் அவளை ஏற்றிக் கொண்டுவந்து தன்னோடு அவளை ஐக்கியப்படுத்திக் கொண்டான் என்பது தான் ஆண்டாளுடைய வரலாறு. 

கனவு கனவு அல்ல. கனவு நனவு கூட ஆகிறது என்பதற்கு ஆண்டாளுடைய வாழ்க்கை ஒரு உதாரணம். 'ஸ்ரீ வில்லிபுத்தூர் விளக்கு' நாட்டிய நாடகத்திலே ஒரு குறிப்பிட்ட காட்சியிலே நாரதர் வருகிறார். பகவானிடத்தில் அவர் வந்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக அனுப்பி வைக்க சொன்ன மாதிரி ஒரு காட்சி வருகிறது. அதையே வேறு மாதிரி கூடச் சொல்லுவார்கள். சுவாமி வேதங்களை ரட்சிப்பதற்காக பூமி சமுத்திரத்திற்கடியில் மூழ்கி இருந்தபோது அவர் வராக அவதாரம் எடுத்து அந்த பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். அப்பொழுது கூட அந்த பூமாதேவி சந்தோஷமாக இல்லை. இவர் கேட்டார்- நான் தான் உன்னை சமுத்திரத்திற்கடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்டேனே இன்னும் ஏன் கலக்கமாக இருக்கிறாய் என்று கேட்ட போது அவள் சொல்லுகிறாள்- பூமா தேவியாகிய என்னை நீ கரைதேற்றி விட்டாய். ஆனால் இந்த பூ உலகத்தில் இருக்கிற என்னுடைய பிள்ளைகள் எல்லாம் கடைத்தேறவில்லையே என்று கதறி அழுதபோது சரி சரி உனக்கு இவ்வளவு தாய்மை இருக்கிறது . அதனாலே நீயே ஒரு அவதாரம் எடுத்துவிட்டு அவர்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு வழிகாட்டு போ என்று அந்த பகவான் சொன்னார் என்று ஒரு கதை உண்டு.

அந்த மாதிரி அகழ்வாரை தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரை பொறுத்தல் தலை- என்பது போல இந்த உலகத்தில் பூமாதேவியினுடைய திருஅவதாரம் தான் ஆண்டாளாக வந்தது. இந்த கலியுகத்தைப் பொறுத்த மாத்திரம் மக்களுக்கு எந்தவிதமான யாகாதி ஹோமங்களும் செய்வதற்கான அவகாசம் இருக்காது என்பதாலே சாதாரணமாக ஒரு பக்தியின் மூலமாக இறைவனை அடைய முடியும் என்று தன்னுடைய வாழ்க்கையை ஒரு பாடமாக்கி அவள் உணர்த்திவிட்டுப் போனாள். வேறு ஒன்றுமே செய்யவில்லை. சூடிக் கொடுத்தாள், சூடக் கொடுத்தாள். அப்போது, வேறு ஒன்றுமே செய்யத் தேவையில்லை. நீங்கள் கூட பகவானை நினைத்து ஒரு புஷ்ப கைங்கர்யம் செய்யலாம். அதன் மூலமாக பகவானுடைய அனுகிரகம் உனக்குக் கிடைக்கும் என்பது ஆண்டாளுடைய வரலாறு.

ஆண்டாள் பெரிய தவமோ, காட்டிலேயோ, குகையிலேயோ போய் உட்கார்ந்து செய்யவில்லை. சாதாரணமாக இருந்தாள். ஆனால் எப்போதும் சதா சர்வகாலமும் பகவானுடைய நினைப்பில் இருந்தாள் என்பது முக்கியம்.

இன்னொரு வகையில் பார்த்தால் அவள் பாடிய பாடலிலே நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர் என்று வரும். அப்போது நீராடப் போதுவீர் என்று பாடிய ஆண்டாளுடைய தகப்பனார் எப்படிப் பட்டவர் என்று நீங்கள் பார்க்க வேண்டும். மஞ்சள் நீராட வாராய் என்று சொல்லி உண்மையாகவே கிருஷ்ணனை தன்னுடைய குழந்தையாகவே நினைத்து நான் உன்னை குளிப்பாட்டணும் ஓடி வா என்று பாடிக் கொண்டிருந்த மகானுபாவர். உண்மையாகவே கிருஷ்ணனை தன்னுடைய குழந்தையாகவே பாவித்துக் கொண்டிருந்தார். அந்த மாதிரி நினைத்ததால் தான் அந்த பகவான் பல்லக்கிலே வருகிற போது அவர் கண்ணுக்கு மாத்திரம் அவன் ரொம்ப இளைச்ச மாதிரி தெரிந்ததாம். அதனால் தான் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்... என்று பாடினார். பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடியதன் நோக்கம்- அவருடைய கண்ணுக்கு செல்லப் பிள்ளை இளைத்திருக்கிறான் என்ற பாவம் வந்ததினால் அப்படி பாடினார்.

அப்படி வருமா என்றால் வரும். கடவுளோடு நாம் ஐக்கியமாகி இருக்கிற போது அப்படி வரும். நம்முடைய தேவாரத்திலே கூட அந்த மாதிரி வந்தது. நடராஜப் பெருமாள் நிற்கிறாராம். அப்பர் சுவாமி வந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்தவுடனே அப்பருக்கு என்ன தோன்றுகிறதாம்? என்று வந்தாய் என்று குறிப்பு எடுத்தேன். வந்து நின்றவுடனே இப்படிப் பார்க்கிற போதே எப்போ வந்தாய்? என்று கேட்கிற மாதிரி தோன்றுகிறது என்று சொன்னார். தன்னைக் கேட்கிற மாதிரி தோன்றுகிற பக்குவமும், பாவமும், அந்த அனுபவமும் எப்பொழுது வரும் என்று சொன்னால் நீ உன்னை அந்த பகவானிடத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னுடைய மனதை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பாவத்தில் as a friend, as a father, as a daughter or as a lady love or anything- ஏதாவது ஒரு பாவத்தில் அவனைப் பிடித்துக் கொள்கிறபோது அந்த அனுபவங்களை நீ கூட நுகர முடியும். அனுபவங்களை மாந்திக்களிக்க முடியும் இந்த உலகத்தில். 


மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன் கண்டாய் அம்மானாய் என்று சொல்கின்ற வகையில் 'நான் மனிதர்களை மணந்து கொள்ள மாட்டேன். மணந்தால் ரங்கநாதனோடு தான்' என்று சொல்லக் கூடிய ஒரு பக்குவத்தில் உண்மையாக பகவானைத் தேடிக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால், அந்த அரசனிடத்திலே சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரைக்கும் வழி எங்கும் தோரணங்கள் கட்டி பல்லக்கில் அவளை ஏற்றிக் கொண்டுவந்து தன்னோடு அவளை ஐக்கியப்படுத்திக் கொண்டான் என்பது தான் ஆண்டாளுடைய வரலாறு.






e3cf91ca-d941-4c17-b51d-3bafa55c0a02_S_secvpf
ஆண்டாளை வழிபடும்போது அவள் இடது தோளில் இருக்கும் கிளியையும் வழிபட தவறாதீர்கள். இந்த கிளி ஆண்டாளின் விருப்பத்தை ரங்கநாதரிடம் தெரிவிக்க தூது சென்ற கிளியாகும். எனவே இந்த கிளி உங்கள் திருமணத்துக்கும் வழிகாட்டும்.

இது தவிர ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு ஆண்டாள் போல பக்தியும், அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தை பிறக்கும் என்பார்கள். பெரும்பாலான வைணவத் தலங்களில் ஆண்டாள் தனி சன்னதியில் அருள்வதை பார்த்து இருப்பீர்கள்.

ஆண்டாள் பாடல்கள்

ஆண்டாள் 15 வயதில் இறைவனுடன் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது.இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.
ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவ தலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.

Home  Previous                                                  Next

No comments:

Post a Comment