April 14, 2016

Sattaimuni - Part 2

சட்டைமுனி.

Picture
தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.     சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார்.     
தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை, அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும்.
சட்டைமுனி இரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் இரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள இரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார்.     சட்டை முனி, திருவரங்கத்தில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார்; இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார் என்று கருதப்படுகிறது. 
சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர். சேணிய வகுப்பைச்சார்ந்தவர். தாய், ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டு தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் செய்து பிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்டக் காரணத்தால் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது வட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர் விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழி தான் செல்லும். தாய், தந்தையரைக் காப்பாற்றும் பொருட்டு நீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும். சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார். 
சட்டைமுனி மன மகிழ்ச்சி கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனை ஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்குத் தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடை பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தினார். அனுதினமும் கோயில் சென்று சிவனை வழிப்படத் தவறவில்லை.
ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டு வெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. ‘ஏனப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதவிட எண்ணமில்லையா? ‘ சட்டைமுனி திடுக்கிட்டுத் திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில் வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்று தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். [இவரைக்  ‘கயிலாய சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளி சட்டைமுனி என்றும் அழைத்து வந்தனர்] சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை. இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கே இது போகப்போக விளங்கும்” என்றார். 
அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்து சித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார்.போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர், கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞான நிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார்.இவரின் தவத்தால் கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்..ரோமசர் போன்ற சித்தர்களின் நட்பும், ஆதரவும் பெற்று சிறந்து விளங்கினார் சட்டைமுனி ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, நிகண்டு, வாத காவியம், தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார்.” கயிலாய பரம்பரையில் வந்த பேர்க்குக் கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே..“     என்று இவர் பாடுவதால் கயிலாயத்தில் வாழ்ந்தவர் என உறுதிப் படுத்தியுள்ளார். அதனால் இவர் இயற்றிய பாடல்கள் மானிட உலகிற்குக்  கிடைத்த மாபெரும் சொத்தாகும். இவர் இயற்றியதெல்லாம்  ஞானப் பாடல்களாகும்.
ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்
அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்
செகமெலாம் பெண்ணான வுருத்தானப்பா!
ஓமப்பா பொன்மண் வா சணை வி னாசை
ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை
நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை
நல்வினைக்குத் தீவினைக்கும் வித்து மாச்சே.  
[இவ்வுலகை எல்லாம் அடக்கி ஆளும் “திரோதாயி’’ எனும் மாபெரும் சக்தி பெண் சக்தியாகும்.    இவ்வுலகப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசைதான் துன்பங்களுக்கு மூலகாரணம்.   இதனை நன்கு அறிந்துக்கொள்ளவேண்டும். நாம் கொள்ளும் ஆசை, ஐம்புலன்கள் தம் வழியே   செயல்படும்போது நல் வினைக்கும் தீவினைக்கும் வித்தாக அமைகிறது. ]
சட்டைமுனி ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து “அரங்கா….. அரங்கா…” என்று குரல் கொடுக்க, வாசல் திறந்தது. கோயிலுக்குள் சென்று இறைவனை மனமுருகி வேண்டினார். கோயில் வாயிற் திறந்திருப்பதைக் கவனித்த காவலர்கள் சட்டைமுனியை கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். நிர்வாகத்தினர் அரசனிடம் அழைத்துச் சென்றனர். மன்னர் விசாரணையில் நடந்த விபரத்தினை கூற மன்னன் இந்தக் கூற்றை நம்பவில்லை.     இது உண்மையா என அறிய சட்டைமுனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி….,  “எங்கே குரல் கொடு மணி அடிக்கிறதா… வாயிற் கதவு திறக்கிறதா என்று பார்ப்போம்.. என்றனர்.   
சட்டைமுனி மீண்டும் “அரங்கா……, அரங்கா…” என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானே திறந்து மணியும் ஒலித்தது. மன்னரும் மக்களும் அவரின் மகத்துவைத்தை உணர்ந்து வணங்கி நின்றனர். மன்னன் தான் தவறு செய்ததை உணர்ந்து அவரைத் தம்மோடு தங்கியிருக்க வேண்டினார். சட்டைமுனியும் திருவரங்கத்திலேயே தங்கி இறைவனுடன் கலந்தார்.
       மயங்குவான் பொண்டேப் புரட்டுப் பேசி
       மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்
       தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;      
       சாதகமா யோகத்திற் சார்ந்தே என்பான்;      
       தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே என்பான்
       செகசால் திரோதாயி சிரிப்பான் பார்த்து;      
       முயங்குவான் சமாதிவிட்டே னையோ வென்பான்
       மூடமொற்ற ஞான்மெல்லா முலகிற் பாரே. 
[ மனிதன் பொன்னையும், பொருளையும் தேடப் பொய் பேசுகிறான்.        ஞானம் (மெய்யறிவு) எதுவும் பெறாமலேயே மகத்தான ஞானம் தாம் பெற்று விட்டதாக வீண் ஜம்பம் செய்வான். யோகத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டு விட்டேன் என மக்களை மயக்குவான் தனக்கு நோயோ, வேறு எந்தத் துயரங்களோ வருமாயின் இறைவா !        எனக்கா இந்த சோதனை என்பான். செலவந்தனாக இருந்த போது இறைவனை நினையான். இதனை கண்டு மாயை [திரோதாயி]        சிரிக்கிறாள் ]
        பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;      
       பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு;    
        மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
        தங்கிநின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச்
       சமாதியென்ன மிந்திரியச் சார மூடித்
       தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகத்
       சுனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.  
உடலில் தோன்றுகிற ஆசையால் மனம் சுகங்களில் அலைப்பட்டு   வாழ்வு வீணாகிறது. இறுதியில் வாழ்க்கை சூனியமாகிறது. அதன்   பின்தான் மனிதனுக்கு ஞானமும், அறிவும் தோன்றுகிறது.   இதனைத்தான் கண்ணதாசன் “ கெட்ட பின்பு ஞானி “ என்றார்.
"பாலனாம் சிங்களவ தேவ தாசி
பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான்
சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு"
- போகர் 7000 - 
சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.
பொதுவாகச்  சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது. இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகின்றது.
சட்டைமுனி ஞானம் 
எண்சீர் விருத்தம் 
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப்
பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே.1 
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே.2 
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக்கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே.3 
பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!4 
தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே.5 
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே.6
(பாடல்கள் நிறைவுபெற்றது.) 
சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி ! நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

No comments:

Post a Comment