June 25, 2014

Kotpuli Nayanar- Nayanmar 55

55. Kotpuli Nayanar

This saint was a Vellala by caste. He was the Commander-in-Chief of a Chola king. He was highly devoted to Lord Siva. He was very pious and virtuous. It was his practice to purchase paddy out of his income and give it to Siva temples for the Lord’s food. He was doing this for a long time.

Once he had to go out on military duty. So, he stocked a sufficient quantity of paddy for the temple use, handed it over to his relatives, with clear instructions that it was meant only for the Lord and that they should not touch it for their own use. During his absence, there was a famine and his relatives had to suffer for want of food. So, they laid their hands on the paddy meant for the Lord and appeased their hunger. The Nayanar returned from his duty and heard of his relatives’ action. He was annoyed with them. He called them to his house and killed them, including his parents, for this crime. His supreme love for the Lord had so completely overshadowed his love for his own near and dear ones! The Lord appeared at once before him and blessed him, and also all the relatives who had died at his hand, and took them all to His Abode.

courtesy: Dinamalar

கோட்புலி நாயனார்
 Temple images
காவிரி பாயும் சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் - வீரவேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால், இவருக்கு கோட்புலியார் என்று காரணப் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் இவரது இயற்பெயராக இருக்கும் என்று எண்ணுவதற்கில்லை. எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனால் அவருக்கு இச்சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார். போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.


போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல்புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன்பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை! அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான். அவன் மொழிந்ததைக் கேட்டு, மேலும் கோபம் வளர நாயனார், இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் மூலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு துண்டாக்கினார். அப்பொழுது சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளினார். அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு அகன்றவராயினர். அவர்கள் சிவபுரியில் இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையில் நம்முடன் அணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது!


குருபூஜை: கோட்புலி நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

 

கோட்புலி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது


திருவிரையாக்கலி மீறல் அதிபாதகமா மெனல்

திருவாசகத்தில் தசாங்கப் பதிகம் கூறுகின்றவாறு சிவபெருமானுடைய பெயர் மஹாதேவன்; ஊர் உத்தரகோசமங்கை; குதிரை ஞானப்புரவி; கொடி ஏற்றுக் கொடி; படை கழுக்கடை; முரசு நாதம் என்பதற்கிணங்க அவருடைய ஆணை விரையாக்கலி எனப்படும். அது கோயினான் மணி மாலையில் "விரையாக்கலியென்னு மாணையும்" என வருவதனாற் பெறப்படும். திருநீல கண்ட நாயனாரின் மனைவியார், கணவர் விஷயத்தில் ஆணையிடுகையில் சிவன் திருவங்கமாகிய திருநீலகண்டத்தின் மேல் வைத்து ஆணையிட்டமைபோல எவரேனும் எதற்கேனும் ஆணையிடுகையில் சிவனாணையாகிய விரையாக்கலியின் மேல் வைத்தும் ஆணையிடுதல் வழக்காறென்பது கோட்புலி நாயனார் வரலாற்றினால் அறியப்படும்.


கோட்புலி நாயனார் சிறப்பு மிக்க சேனாதிபதியாயிருந்து தாம்பெறும் வருவாய் கொண்டு திருக்கோயில்களிற் சுவாமி நைவேத்தியத்திற்கான அமுதுபடிக்குச் செந்நெல்வாங்கிச் சேமித்து வைத்து வழங்கும் வழக்கமுடையராயிருந்தார். ஒரு தடவை அவர் பலமாதம் நீடிக்கக்கூடிய போரொன்றுக்குச் செல்ல வேண்டியானபோது சுவாமி நைவேத்தியத்திற்கெனச் சேமிக்கப்பட்டிருந்த நெற்கூடுகளில் தீண்டலாகாதெனத் தமது பெற்றார் உற்றார் அனைவரிடத்திலும் தனித்தனி அறிவித்துத் திருவிரையாக்கலியின்மேல் ஆணையிட்டு வற்புறுத்திச் செல்வாராயினர். அவர் சென்று திரும்புதற்கிடையில் கடும்பஞ்சமொன்று குறுக்கிட்டமையால் வருந்திய பெற்றாரும் உற்றாரும், "இப்போதைத் தேவைக்கெடுத்துவிட்டுப் பிறகு கொடுப்போம்" என்ற அடிப்படையில் தற்காலிக ஆணைமீறலாக அந்நெற் கூடுகளைப் பிரித்து உணவுக்குபயோகப் படுத்திக் கொண்டனர். போரில் வெற்றி பெற்றுத் திரும்புகையில் நிலைமை தெரிந்து கொண்ட நாயனார் அதைத்தாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் சுமுகமான நிலையிற் பெற்றார் உற்றார் எல்லாரையுமொருங்கழைத்து அனைவரையுந் தங்கைவாளுக் கிரையாக்கி ஒழித்துவிட்டார். இறுதியாக அணுகப்பட்ட பால்குடி பருவக் குழந்தை யொன்றைச்சுட்டி, இது அந்நெல்லை உண்டதில்லை என அவர் பெயர் தாங்கியிருந்த அவருடைய வாயிற் காவலாளன் பரிந்துரைத்தபோது, அந்நெல்லுண்டவளின் பாலைத்தானே இதுவும் உண்டதென மறுத்துரைத்துவிட்டு முன்னிருந்ததிலுங் கூடிய உத்வேகத்துடன் அக்குழந்தையை எடுத்தெறிந்து வாளால் அதனைத் துணிப்பாராயினர். அது, அவர் புராணத்தில், "பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைத்தம் பெயரோனவ் வன்னந்துய்த்திலது குடிக்கொருபுதல்வன் அருளுமென இந்நெல்லுண்டாள் முலைப்பாலுண்டதென எடுத்தெறிந்து மின்னல்ல வடிவாளா லிருதுணியாய் விழவேற்றார்" என வரும்.


இங்ஙனம் பச்சிளங் குழந்தை விஷயத்திற்கூடப் பரிவுகாட்ட மறுக்குமளவுக்கு இந்த நாயனார், சிவாபராதத்துக்கு உரிய தண்டனைத் தீர்வு கொடுத்தேயாக வேண்டுமென்ற தமது தொண்டுறுதியில் தளராதிருந்துள்ளார். சிவ நைவேத்தியத்துக்கென வைத்த நெல்லைத் தீண்டியதே அதிபாதகச் செயலாக, அவர்கள் சிவ ஆணையின்பேரில் தாமிட்ட ஆணையை மீறியதன்மூலம் மற்றுமோ ரதிபாதகந் தேடி இருமடங்கு அதிபாதகத்துக்குரியராய் விட்டமையின் கொலையன்றி மற்றெதுவும் அவர்பாவத்துக்கு உரியதண்டனைத் தீர்வாகா தென்பது நாயனார் திருவுள்ளம் இருந்தவாறு. எனவே வெறுமனே, சினந்தீர்த்தலோ பழிவாங்குதலோ நோக்கமாகக் கொண்டு நிகழும் சாமானிய மறக்கொலைகள் போலாது, இவர் நிகழ்த்திய கொலை அவர்களுக்கு விளையவிருந்த அதிபாதகக் கொடுமையிலிருந்து அவர்களைத் தப்பிப் பிழைக்க வைக்குங் கருணையோடு கூடிய அறக்கொலையாம். அது அங்ஙனமாதல், அவர் செயல்முடிவில் உடனடியாகவே சிவபெருமான் அவரெதிரில் வெளிப்பட்டு, முதலில் அவர்பெற்றார் உற்றார்க்குச் சுவர்க்கமாதி மேல்கதிவாழ்வருளிப் பின்பே அவருக்குத் தன்னுடன் சேரும் பேரின்ப வாழ்வருளியுள்ளமையால் துணியப்படும். அது அவர் புராணத்தில், "அந்நிலையே சிவபெருமான் அன்பரெதிர் வெளியேநின் றுன்னுடைய கைவாளாலுறு பாசமறுத்தகிளை பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் பகழோய் நீ இந்நிலைநம் முடனணைகென் றேவியெழுந் தருளினார்" என வரும்.


நாயனாரது தண்டனைத் தீர்வினால் அவர் பெற்றாரும் உற்றாரும் பாவநீக்கமாகிய நன்மையே பெற்றார்களென்பது இச்செய்யுளிலும், "உன்னுடைய கைவாளா லுறுபாச மறுத்தகிளை" என அநுவதிக்குப்பட்டிருத்தல் குறிப்பிடத்தகும். அருளாளர்களாய சிவனடியார்கள் கையாற் பெறுந் தண்டனைத் தீர்வு பாபநீக்கம் விளைப்பதாதல் முன் கழற்சிங்க நாயனார் புராண சூசனத்திற் காணப்பட்டவாறுங் கருதத்தகும். மேலும், இக்கோட்புலி நாயனார் சிறந்த அருளாளராதல், அவர் ஏலவே சுந்தர மூர்த்தி சுவாமிகளைத் தமதில்லத்தில் வரவேற்றுபசரித்து அவர்க்கு நண்புறவு பூண்டு தம் புத்திரிகள் இருவரையும் அவர் புத்திரிகளாக அவர் ஏற்றுக்கொள்ள வைத்த வகையால் அவரருளுக் காளானமையானும் சுவாமிகள் தமது தேவாரத் திருப்பாடல் சிலவற்றில் தம்மை வனப்பகை அப்பன் சிங்கடியப்பன் என அப்புத்திரிகளின் பெயர்சார்த்திக் குறிப்பிட்டுள்ளமையானும் நாயனாருடைய ஊராகிய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்குஞ் சிவ பெருமானைச் சுவாமிகள் பாடியருளிய பதிகப் பாடலொன்றில், கோட்புலியார் வாழும் ஊரிலிருக்குஞ் சிவபெருமான் என்றதன் மூலம் நாயனார் மகிமையைச் சிறப்பித்துள்ளமையானும் இனிது பெறப்படும். குறித்தபாடல், "கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்கழற் சிங்கடியப்பன் திருவாரூரன் உரைத்த பாடீராயினும் பாடுமின் தொண்டீர் பாட நும்வினை பற்றறுமே" என வரும். இங்ஙனம் கோட்புலி நாயனார் சுந்தரரளுக்குப் பாத்திரமாயினாரெனல், "குற்றமறுக்குங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற அருட்கட லென்றுல கேத்தும் பெருந்தகையே" என்னுந் திருத்தொண்டர் திருவந்தாதித் திருப்பாடலினும் போற்றப்பட்டிருத்தல் காணத்தகும். கோட்புலியார் கொலை மூலந் தம் பெற்றாருற்றாரைக் குற்றமறுத்தமை, "குற்றமறுக்குநங் கோட்புலி" என இப்பாடலில் வருமாறுங் கருதத்தகும்.


திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment