February 20, 2016

Konganavar - Part 4

கொங்கணவர் வாழ்க்கை வரலாறு – பாகம் 3






Inline image 1

கொங்கணவர் போகமுனிவரை எப்போது எங்கு சந்தித்தார் என்பதற்கான பாடல்கள் இல்லை. ஆனாலும் போகரைப் பற்றிக் கொங்கணவர் கூறும் போது என்னை ஈன்ற போகர் என்று பெருமிதத்தோடு தம் பாடல் ஒன்றில் கூறியுள்ளார். போக முனிவரின் சீடராகிய அவரிடம் உபதேசம் பல பெற்ற பின் அகத்தியரிடம் சிலகாலம் சீடராய் இருந்து உபதேசம் பெற்றார். போகரிடமிருந்து அனைத்தும் கற்றுணர்ந்த சித்தராய் வெளியேறிய பின் கொங்கணவரின் வாழ்வில் இரு சோதனைகள் குறுக்கிட்டன. ஒரு நாள் ஆழ்ந்த நிஷ்டையில் கொங்கணவர் இருந்தார். அப்போது விண்ணில் பறந்து சென்ற ஒரு கொக்கு எச்சமிட, அது கொங்கணவர் மீது விழுந்தது. நிஷ்டையிலிருந்து இதனால் விடுபட்ட கொங்கணவர் சட்டென அக்கொக்கை விழித்துப் பார்க்க அடுத்த கணமே அக்கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனது.நீண்ட நேரம் நிஷ்டையில் இருந்தமையால் சிறிது உணவு உட்கொள்ள எண்ணிய கொங்கணவர் ஓர் வீட்டின் முன்சென்று உணவு கேட்டார். அப்போது அந்த இல்லத்தரசி தனது பதிக்கான சேவையில் இருந்தாள். தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்த பின் அவள் கொங்கணவருக்கு உணவை எடுத்துவரத் தாமதமானது. கடும்பசியுடன் இருந்த கொங்கணவர் கடுங்கோபம் கொண்டு அம்மாதை விழித்துப் பார்த்தார். ஆனால், அம்மாது சற்றும் சட்டை செய்யாது புன்முறுவலுடன்,

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று வினவினாள். அதுகேட்டதும் கொங்கணவர் வெட்கித் தலை குனிந்தார்.

கொங்கணவரின் வாத காவியம் மூன்றாவது காண்டத்தில் திருமூலருக்கும் கொங்கணவருக்கும் நடைபெற்ற தர்க்கம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. திருமூலர் கொங்கணவரிடம், “அன்று நீ உன் வித்தையைக் கொக்கிடம் காட்டி னாயே? அந்த வித்தை ஒரு பெண்ணிடம் பலித்ததா?” என்று கிண்டலாகக் கேட்பது போன்று அப்பாடல் அமைந்துள்ளது.

அப்பாடலில் கொங்கணவரிடம் திருமூலர்,
சபித்தாய் நீ கொக்கை அன்று
தனிக் கோபம் பெண்ணின் மேலே
எபித்தாய் நீ ஏறாதேனோ
விதமென்ன ஊணிப்பாரு
என்று கேட்பதாக அமைந்துள்ளது.

ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந்த ஆளிடம் பசிக்கிறது என்று கேட்டார். அந்த ஆள் சிறிது நேரம் அமர்ந்திருங்கள் என்று கூறி ஒரு ஆட்டை வெளியே ஓட்டி   சென்றார்.ஆட்டை கசாப்பு போட்டு விற்று விட்டு வந்து சமையல் செய்து முதலில் கண் தெரியாத தாயாருக்கு ஊட்டி விட்டு பின்பு கொங்கனரை சாப்பிட அழைத்தார் ,இவருக்கு கோபம் வந்து முறைத்தார் அதற்கு அந்த ஆள் உங்களைப்போல் அம்மாவை நான் அனாதையாக விட்டு விடவில்லை அம்மாவை கவனித்துவிட்டுதான் எனக்கு மறுவேலை என்றார். இவனுக்கும் நம்மை விட விஷயம் அதிகம் தெரிந்துள்ளது நாம் அம்மாவை விட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று வியந்தார். பின்பு தாயிடம் வந்து தொண்டு செய்தார்.

அதன் பின்னர் கொங்கணவர் தம் வழிப்பயணத்தின்போது திருமழிசை ஆழ்வாரைச் சந்தித்தார். தம்மிடம் இருந்த குளிகையை அவர் ஆழ்வாரிடம் காட்டி “இது காணி கோடியைப் பேதிக்கும்” என்றார்.

உடனே ஆழ்வார் தம் உடலில் இருந்த அழுக்கைத் திரட்டி உருட்டிக் கொங்கணவரிடம் கொடுத்து, “இது காணி கோடா கோடியைப் பேதிக்கும்” என்றார். உடனே ஆழ்வாரின் பெருமையை உணர்ந்த கொங்கணவர் அவரைப் பணிந்து வணங்கி விடைப்பெற்றுத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

அலைந்து திரிந்த கொங்கணவர் தம் தவவலிமையை மேலும் பெருக்கிக் கொள்ள எண்ணி ஓர் யாகம் செய்யக் கருதினார். அதற்குத் தகுதியான ஓர் இடம் தேடி அவர் காடு, மலையென அலைந்து திரிந்தார். காட்டில் ஓரிடத்தே விசாலமான பாறை ஒன்று காணப்பட்டது. அதனைக் கண்டதும் கொங்கணவருக்கு நிம்மதியுண்டானது. அப்பாறை மீது நீட்டிப்படுத்த கொங்கணவர் ஆகாயத்தைப் பார்த்தார், “அன்னையே நீதான் எனக்கு வழிகாட்டியருள வேண்டும்” என்று பராபரியான மனோன்மணி தாயை எண்ணித் தியானத்தில் ஆழ்ந்தார்.

அப்போது அவர் கண்களி்ல் விசித்திரத் தோற்றங்கள் உண்டாயின. அங்கு சேகண்டி, மத்தளம், பேரிகை முதலிய பலவித வாத்தியக் கருவிகளின் ஓசைகள் அவரது காதுகளில் விழுந்தன. அவற்றைக் கேட்டதும் கொங்கணவர் மதிமயங்கிப் போனார். அவர் எதிரே ஒரு சமாதி தெரிந்தது. உடனே கொங்கணவர் பக்திப் பரவசத்தோடு மலர்கள் பலவற்றைப் பறித்துச் சென்று அந்தச் சமாதி முன்பாகப் போட்டு கரம்கூப்பி வணங்கி நின்றார். உடனே அச்சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்துத் திறந்தது. அதனுள்ளிருந்த ஜோதி வடிவாய் கெளதம மகரிஷி தோன்றியருளினார்.

அவரைப் பணிந்து வணங்கிய கொங்கணவர் அவரிடம் தம் வரலாறு முழுவதையும் உரைத்து, மனோன்மணித் தாயின் பேரருளால் அவரைத் தரிசிக்கும் பேறு கிடைக்கப் பெற்றதாகவும் கூறினார். அதுகேட்டு கெளதம முனிவர மகிழ்ந்து கொங்கணவருக்கு உபதேசம் செய்து, “மகனே… உன் விருப்பம் போல் நீ செய்யலாம்” எனவுரைத்துச் சமாதிக்கான இடத்தைக் காட்டிவிட்டுச் சென்றார்.

கெளதம முனிவர் காட்டிய அந்த இடத்தில் கொங்கணவர் சமாதியில் இறங்கினார். அப்போது மழை பெய்து சமாதியை மண் மூடியது. பருவமாறுதல்கள் எதனையும் உணராது, ஆடாமல், அசையாமல் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் சமாதியில் கொங்கணவர் இருந்து பின் வெளியே வந்தார். மீண்டும் யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகவே கொங்கணவர் அதனை உடனே துவக்கினார்.

கொங்கணவர் யாகம் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென கெளதம முனிவர் அங்கு வந்தார். கொங்கணவரின் யாகத்தைக் கண்டு கோபம் கொண்ட கெளதம முனிவர். “யாகமா செய்கிறாய்? எப்படி நீ யாகம் செய்யலாம்? என்னைப் போன்று பெரும் ரிஷிகள் அல்லவா யாகம் செய்ய வேண்டும்? அதிகப்பிரசங்கித்தனமாய் நீ இந்தக் காரியத்தைச் செய்தால் பிடி சாபம்.” என்றார்.

அது கேட்டதுமே கொங்கணவர் அஞ்சி நடுங்கி, அவரைப் பணிந்து, “ஐயனே, இச்சாபத்திற்குண்டான விமோசனம் என்ன? கருணை கூர்ந்து கூறியருள வேண்டும்” என்று வேண்டினார். கொங்கணவர் நிலை கண்டு மனமிரங்கிய கெளதம முனிவர், “கொங்கணவா, நீ தில்லைவனத்துக்குச் சென்றால் உனக்குச் சாப விமோசனம் உண்டாகும்” என உரைத்தருளிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

அதன்படியே தில்லைவனத்தை அடைந்ததும், கொங்கணவர் தாயான மனோன்மணியைத் துதித்தபடி அங்கேயே இருந்தார். ஒரு நாள் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, பராசர முனிவர் அங்கு வருகை தந்தார். பராசர முனிவரைக் கண்டதும் கொங்கணவர் விரைந்தோடிச் சென்று அவரைப் பணிந்து வணங்கினார். தாம் ஞான திருஷ்டியால் கொங்கணவரின் வரலாற்றை உணர்ந்த பராசர முனிவர், மனமிரங்கி கெளதம முனிவர் அளித்த சாபத்தை நிவர்த்தி செய்ததுடன் விருப்பம் போல் அவர் யாகம் செய்ய வரமும் அளித்தார். பின் கொங்கணவர் யாகத்தைச் செய்து முடித்ததும், கெளதமர் அவர்முன் மீண்டும் தோன்றி அவருக்கு உபதேடசம் செய்தருளி வாழ்த்தினார்.

மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார் கொங்கணவர். அப்போது தன்மனதில் ஏதோ ஓர் குறை இருப்பதுபோல் அவருக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. அதனால் மீண்டும் தம் குருநாதர் போகரிடம் சென்று தம் மனக்குறையைக் கூறினார்.

அதுகேட்டுப் போக முனிவர், அவரிடம், “நீ திருமாளிகைத் தேவரைச் சந்தித்து, அவரிடம் தீட்சை பெறு. உன் மனக்குறை தீரும்” என்று கூறியருளினார். உடனே கொங்கணவர் சென்று திருமாளிகைத் தேவரைச் சந்தித்தார். தம்மைச் சந்திக்க வேண்டி வந்த கொங்கணவரை எதிர்கொண்டழைத்து திருமாளிகைத் தேவர் உபசரித்தார். “இரண்டு முறை யாகம் செய்து அளவு கடந்த தவ வலிமைபெற்ற கொங்கணவரே…. தங்களது பெருமையையும் தவ வலிமையையும் உலகம் யாவும் அறியும். தாங்கள் அடியேனைக் காண வந்ததன் காரணம் யாது?” என்று வினவினார்.

அதற்கு கொங்கணவர், “குருதேவரின் கட்டளைப்படி நான் தங்களிடம் வந்தேன். குருநாதர் என்னைத் தங்களிடம் தீட்சை பெறுமாறு கட்டளையிட்டார்” என்றார். அதன்படியே கொங்கணவருக்குத் திருமாளிகைத் தேவர் இரகசிய சாதனை முறைகள் பலவற்றை உபதேசித்து, சமய தீட்சை, நிர்வாண தீட்சை முதலியவற்றையும் அளித்தார்.

அதன்பின் ஓரிடத்தில் தங்கிய கொங்கணவர் யோக நெறியோடு வாழ்ந்தார். இவர் தமது ஐநூறுக்கும் மேற்பட்ட சீடர்களுக்கு யோக, ஞான சித்திகளைப் பெறுவதற்கான வழிகளைக் காட்டி ருளினார். பின் வேங்கடவன் உறையும் திருப்பதி நோக்கி பயணமானார்.

திருத்தணிக்கு வந்து சேர்ந்த கொங்கணவர், அங்கு வீராட்டகாச மூர்த்தியின் தலை மீது குளிகையை வைத்துத் தியானம் செய்ய. மூர்த்தி அக்குளிகையைத் தமக்குள் இழுத்துக் கொண்டார். அது கண்டு கொங்கணவர் மனம் வருந்தி மீண்டும் தியானிக்கமூர்த்தி அக்குளிகையைக் கொங்கணவரிடம் திருப்பிக் கொடுத்தார். பின் திருவேங்கட மலைக்கு வந்து சேர்ந்தார். வனேந்திரன் என்ற சிற்றரசன் கொங்கணவரின் சீடனானான். அவனுக்காக அவர் எளிய பல பாடல்களைக் கூறி உபதேசித்தருளினார். பின் திருவேங்கட மலையில் யோக சமாதியில் அமர்ந்தார். இன்றும் மூலஸ்தானத்து வேங்கடவந் திருவுருவச் சிலைக்குக் கீழே கொங்கணவர் யோக சமாதியில் அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.



Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment